கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. தபால் ஓட்டுக்களில் காங்கிரஸ் முன்னிலை
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன
திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நடைபெற்று வருகிறது. இதில் தபால் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை ஆலப்புழை, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக கோட்டயம், எர்ணாகுளம் திருச்சூர் , பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் 10-ம் தேதியும், மூன்றாவது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 14-ம் தேதியும் நடை பெற்றது.
இதில் மொத்தம் 76.63 சதவீத பேர் வாக்களித்துள்ளனர். டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின.. டிசம்பர் 10-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதம் பேர் வாக்களித்தனர். டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 78.62 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.98 சதவீதம் பேர் வாக்களித்தனர்.. இந்நிலையில், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்ப படையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள, வாக்கு பெட்டிகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது... முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் உள்ளது.. இதன் பின்னர் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.. பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்களில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. எனினும், மாநகராட்சிகளில் இடது முன்னணி முன்னிலை வகிக்கிறது.
அதேபோல, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற சில வார்டுகளில் தற்போது அக்கட்சி பின்னணியில் உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம் என்று பாஜக அறிவித்திருந்த நிலையில், எந்த மாநகராட்சியிலும் பாஜக இதுவரை முன்னிலையில் இல்லை.. ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் பாஜக 2வது இடத்தில் உள்ளது.
2021: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மே.வ. தேர்தல்-நெருப்பாற்றில் நீந்தும் அரசியல் கட்சிகள்!
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், தேர்தல் முடிவுகள் வௌயிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், மதியம் 1 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என நம்புவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.