ஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்
திருவனந்தபுரம்: இன்று ஒரே நாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகை தந்ததால், மொத்த கேரளாவே பரபரப்பாக காணப்பட்டது.
இருபெரும் முக்கிய தலைவர்களின் வருகையால், கேரளா முழுக்க இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலுக்கு வந்து துலாபாரம் காணிக்கை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று அதிகாலை, கொச்சி விமான நிலையம் வந்தடைந்த மோடிக்கு, பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு குருவாயூர் வந்தடைந்தார் மோடி. பின்னர், குருவாயூர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். எடைக்கு எடையாக தாமரைப்பூ மற்றும் கதலிப் பழங்களை பிரதமர் மோடி காணிக்கையாக செலுத்தினார்.
இதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று கேரள வருகை தந்தார். ராகுல் காந்தி, நேற்று பிற்பகல் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்திறங்கி கார் மூலமாக வயநாடு புறப்பட்டார். இன்று காலை, முதல் கட்டமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்ற ராகுல் காந்தி, அங்கே இருந்து பேரணியாக புறப்பட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ராகுல்காந்தி நாளை பிற்பகல் 2 மணியளவில் டெல்லி புறப்படுகிறார். பக்கத்து, பக்கத்து மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடியும், ராகுல் காந்தியும், பங்கேற்றதால் வடக்கு கேரளா முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்
இதனிடையே வாக்காளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன்னை தேர்ந்தெடுத்தது வயநாடு என்ற போதிலும், இந்திய மக்கள் அனைவருக்கும் தனது கதவுகள் திறந்து இருக்கும் என்று தெரிவித்தார்.
இதேபோன்று பிரதமர் மோடி, குருவாயூரில், பேசுகையில், வாரணாசி தொகுதி தன்னை தேர்ந்தெடுத்து இருந்தாலும், அதே போன்ற அன்பை கேரளா மீதும் தான் வைத்துள்ளதாக தெரிவித்தார்.