தங்கை முறை.. திருமணமான பெண்ணை அடைய ஆபாச படம் அனுப்பி டாக்டர் செய்த வக்கிரம்! சீரியல் நடிகரும் கைது
திருவனந்தபுரம்: தங்கை முறை என்றும் பாராமல் திருமணமான பெண்ணை அடைவதற்காக அவரது கணவர், உறவினர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதுடன், மொட்டை கடிதங்களையும் அனுப்பிய டாக்டர், டிவி நடிகர் உட்பட 3 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில் வசிப்பவர் டாக்டர் சுபு. இவர் அங்குள்ள அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். சுபுவுக்கு அவர் தங்கை முறை ஆவார். அந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்ய விரும்பினார். அதற்காக, தம்பதியை பிரிக்க பல்வேறு சதி வேலைகளை செய்ய தொடங்கினார்.
இதன்படி தங்கை முறை என்றும் பாராமல் இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது கணவருக்கு மொட்டை கடிதம் அனுப்பியிருக்கிறார்.இது பற்றி வர்க்கலா போலீசில் கணவர் புகார் அளித்தார். அப்போது, டாக்டர் சுபுவும் அவருடன் சென்று நல்லவர் போல் புகார் அளித்திருக்கிறார்.
கணவன் மீது புகார்
இது ஒருபுறம் எனில், இளம்பெண், கணவர், உறவினர்களின் செல்போன்களுக்கு அந்த இளம் பெண்ணின் ஆபாச படங்கள் வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்திருக்கிறார் அந்த டாக்டர். ஆனால் இதை அறியாத அந்த இளம்பெண் கணவர் தான் ஆபாச படங்களை அனுப்பி இருப்பார் என நினைத்து அதிர்ச்சி அடைந்ததுடன், போலீசில் புகார் செய்தார். அப்போது அந்த இளம் பெண்ணுடன், டாக்டர் சுபுவும் சென்றிருக்கிறார்.
கார்டு
இதற்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளம் தம்பதி பிரிந்தனர். ஆபாச படங்கள், மொட்டைக்கடித விவகாரம் குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் பிரதாப சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகைப்படங்கள் குறித்த தகவல் சேகரித்தனர். இதில், நெடுமங்காடு அருகே ஆநாடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (30), ஆபாச படங்களை அனுப்ப பயன்படுத்திய சிம் கார்டை வாங்கியது தெரியவந்தது.
டாக்டர் உள்பட 3 பேர் கைது
அவர் அந்த சிம் கார்டை, தனது நண்பரான டிவி நடிகர் ஜாஸ்மிர்கானுக்கு கொடுத்திருக்கிறார். இவரும், டாக்டர் சுபுவும் நண்பர்கள் ஆவர். சுபு கூறியபடிதான் ஜாஸ்மிர்கான் அந்த செல்போனில் இருந்து இளம்பெண்ணின் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி அனுப்பி வைத்திருக்கிறார். விசாரணையில் கண்டுபிடித்த போலீசார் டாக்டர் சுபு, டிவி நடிகர் ஜாஸ்மிர்கான். ஸ்ரீஜித் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
சதியை கண்டுபிடித்த போலீஸ்
இதில் மற்றொரு மோசடி என்னவென்றால் ஆதார் மோசடி மூலம் சிம்கார்டை ஸ்ரீஜித் வாங்கியிருந்தது தான். செல்போன் ரீசார்ஜ், ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஸ்ரீஜித்,. தனது கடைக்கு வந்த வட்டப்பாறையை சேர்ந்த வாலிபரின் ஆதார் அட்டையை அவருக்கு தெரியாமல் ஜெராக்ஸ் எடுத்து, , அவருடைய பெயரிலேயே சிம் கார்டு வாங்கியிருக்கிறார். அந்த சிம்மில் தான் இளம்பெண்ணுக்கு எதிரான ஆபாச படங்களை அனுப்பி சதி செய்திருக்கிறார். இதன் மூலம் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருக்கிறார். ஆனால் போலீசார் தீவிர விசாரணையில் அனைத்து உண்மையையும் கண்டுபிடித்தனர்.
மகிழ்ச்சியுடன் சென்ற தம்பதி
இறுதியாக போலீசார் தம்பதியை சேர்த்து வைக்க முடிவு செய்தனர். டாக்டர் சுபு, நடிகர் ஜாஸ்மிகர்கானின் மோசடியால் அவர்கள் பிரிந்த கதையை தம்பதிக்கு எடுத்துக்கூறிய போலீசார், அவர்களுக்கு அறிவுரைகள் கூறி, இருவரும் மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.. அதை ஏற்றுக் கொண்ட தம்பதியினர், சேர்ந்து வாழ்வதாக கூறி காவல்நியைத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.