நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது?
திருவனந்தபுரம்: "யானையை கொல்வதற்காக அன்னாசி பழத்தில் வெடியை வைக்கவில்லை.. வேண்டுமென்றே இந்த செயலையும் செய்யவில்லை.. காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றவே வைக்கப்பட்ட வெடி அது "என்று இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. எத்தகைய விளக்கமும், காரணங்களும் சொல்லப்பட்டாலும் யானை இறந்ததற்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது என்பதே பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை ஜீவகாருண்யம் மிக்க நாடு.. அட்டகாசமே செய்தாலும் சரி, உயிரையே பறித்தாலும் சரி, வெடி வைத்து கொல்வது என்பது கிடையாது.. முக்கியமாக சாப்பாட்டில் வெடியை வைத்து தருவது என்பது இதுவரை நடக்காத அதிர்ச்சி சம்பவம்.. நம் மக்கள் இவ்வளவு குரூரமாக இருந்ததும் கிடையாது!!
ஆனால், கேரள யானை மரண விஷயத்தில் என்ன நடந்தது? பசிக்காக சாப்பாடு தேடி யானை வந்துள்ளது.. அன்னாசி பழத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.. யானை அந்த பழத்தை சாப்பிட்டதும் வெடி வெடித்து விட்டது... அதன் வாயெல்லாம் ரத்தம் கொட்டி புண்ணாகி உள்ளது.. நாக்கு மற்றும் வாயின் உட்புறங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டன.
ஏற்கனவே பசியால் துடித்த யானையால், தொடர்ந்து எதையுமே சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது... அளவுக்கு அதிகமான வலியால் காட்டுக்குள்ளும் திரும்பி போக முடியாமல் அல்லாடி இருக்கிறது. மேலும் வாயில் ஏற்பட்ட அந்த புண்ணில் ஈக்களும், மற்ற பூச்சிகளும் வந்து மொய்க்க ஆரம்பித்துவிட்டன.. அதனால் பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கி உள்ளது.. அப்போதும் அதனால் தண்ணீரைகூட குடிக்க முடியவில்லை.. மூச்சுதிணறியபடியே இருந்திருக்கிறது.. அந்த ஆற்றிலேயே உயிரும் பிரிந்துவிட்டது.. போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோதுதான் அந்த யானை ஒரு கர்ப்பிணி என தெரியவந்திருக்கிறது.
போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டரே கதறி அழுதுவிட்டார்.. "20 வருஷமாக 250-க்கும் மேற்பட்ட யானைகளை போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறேன்.. ஆனால் இப்பதான் முதல்முறையா, ஒரு யானையின் கரு என் கைகளில் இருப்பதை பார்த்து வார்த்தைகளின்றி நகர்ந்து சென்றேன்.. அதன் இதயத்தை நான் பார்த்தேன்.. அதில் அம்னோடிக் என்ற திரவத்தை கவனித்தேன். அப்போதுதான் அது கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தேன்" என்று கனத்த குரலில் சொல்கிறார்.
வயிற்றை கிழித்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!
இந்த கொடூர காரியத்தை யார் செய்தார்கள் என தெரியவில்லை.. ஆனால் ஒட்டுமொத்த நாடும் கொதித்து போய் உள்ளது.. நேற்றில் இருந்து அந்த யானையை மறக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.. குற்றவாளியை கண்டுபிடித்தால் 50 ஆயிரம் தரப்படும் என்று சன்மானம் அறிவிக்கப்பட்டாலும், அந்த யானையின் இழப்பை ஈடு செய்ய முடியாது.
Change.org என்று சோஷியல் மீடியாவில் யானையின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பலரது தங்களது கருத்துக்களை சொல்லி ஆவேசமாகி வருகின்றனர். இப்போதே 5 லட்சம் பேர் கையெழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த யானை உயிரிழந்த பகுதி ரிமோட் பகுதி என்கிறார்கள்.. அதனால்தான் யானையை உடனடியாக கண்டறிந்து, உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள்... எனினும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் அன்னாசி பழத்தில் வெடியை வைத்தார்களா என்ற கோணத்திலேயே இதன் முதல் விசாரணை ஆரம்பமானது.
இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான இந்தியன் பிசினஸ் டைம்ஸ், இந்திய வனத்துறை அதிகாரி ஏபி க்யூமை இது தொடர்பாக பேட்டி எடுத்துள்ளது.. அதில் அவர் சொல்லும்போது, "இறந்த யானைக்கு 15 வயது.. யானை உயிரிழந்த அதே வனபகுதியில்தான் காட்டுப்பன்றிகளும் இருந்திருக்கின்றன... அவைகள் பயிர்களை நாசம் செய்தும் வந்திருக்கின்றன.. இந்த காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக அடிக்கடி வெடிகள் இதற்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.. இது சட்டவிரோதம்தான் என்றாலும், அதனை எங்களால் முற்றிலுமாக கட்டுப்படுத்த இயலவில்லை.
அப்படி காட்டுப் பன்றிகளுக்காகத்தான வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கும்.. அதைதான், யானை தெரியாமல், தவறுதலாக தின்றிருகக் வேண்டும்.. அது மட்டுமில்லை.. பொதுவாக யானைகள் 100 கிமீ தூரம் வரை நடக்கும் திறன் உடையது.. அதனால் இந்த யானை எந்த இடத்தில் அந்த அன்னாசியை சாப்பிட்டது என்று தெரியவில்லை.. அதைதான் கண்டுபிடித்து வருகிறோம்" என்கிறார்.
ஆனாலும், வெடி வைத்ததற்காக இப்படி காரணங்கள் சொல்லப்பட்டாலும் சரி, அல்லது ஒருவேளை காட்டு பன்றிகளுக்காகவே இந்த வெடிகளை வைத்திருந்தாலும் சரி, இதையும் நம்மால் ஏற்க முடியாததுதான்.. விலங்குகளை பிடிக்க எத்தனையோ வழிவகைகள் உள்ளபோது வெடியை வைத்து பிடிப்பது என்பது ஜீரணிக்க முடியாதது.. வனத்துறை இதனை உடனடியாக தடுக்க கடுமையான சட்டமியற்ற வேண்டும்.
Recommended Video
இப்படி விலங்குகளை கொல்ல துணிபவர்கள் மனிதர்களையும் கொல்ல துணிய மாட்டார்கள்.. இந்த மாபாதகம் செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனையை தர வேண்டும், அந்த தண்டனை எந்த வாயில்லாத ஜீவனையும் இனி கொல்லவே கூடாது ஏற்க பாடத்தையும் தருவதாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆதங்கமாக உள்ளது!!