விலங்குகளுக்குக் கூட தரக் கூடாது என எச்சரித்த கேரள அரிசியை பாலிஷ் போட்டு விற்ற தமிழக கும்பல்
திருவனந்தபுரம்: கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து, பாலீஷ் செய்து, மீண்டும் கேரளாவுக்கே அனுப்பிய அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கெட்டுப்போன அரிசி மூட்டைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதுக்குறித்து விசாரித்த போது அதிகாரிகளுக்கு பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவைப் புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் எர்ணாகுளம் அடுத்த செரும்பாவூரில் ஆயிரக் கணக்கான அரிசி மூட்டைகள் மூழ்கின. துர்நாற்றம் வீசிய அந்த அரிசியை விலங்குகளுக்கு கூட கொடுக்கக் கூடாது என்று கேரள உயர் நீதி மன்றம் உத்தரவுப் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் கெட்டுப்போன அரிசியை லாரியில் மூட்டை மூட்டையாக ஏற்றி, திருச்சி, துறையூரை அடுத்துள்ள பெரம்பலூரில் உள்ள பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான பழனி முருகன் எனும் அரிசி ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
உரிமையாளர் பொன்னம்பலம் அரிசியைக் கழுவி பாலீஷ் செய்து, புது அரிசி போன்று வெள்ளை வெளேர் சாக்கு மூட்டைகளில் அடைத்து அடுக்கி வைத்துள்ளார். தினமும் 100க்கணக்கான அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் மீண்டும் கேரள உணவுப் பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை கண்டுபிடித்த உணவுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் தெரிவித்து, தமிழக அதிகாரிகளின் உதவியை நாடியதாகத் தெரிகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி உதவியோடு, அரிசி ஆலைக்குள் நுழைந்து சோதனை செய்ததில் ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இவ்வாறு பாலீஷ் செய்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பொன்னம்பலம், தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரிசி மூட்டைகள் வாங்கும்போது போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.