வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.. கேரளா அறிவிப்பு
திருச்சூர்: கேரள அரசு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தாது, விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களுக்கு எதிராக இந்த வாரத்திலேயே உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று அம்மாநில வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் தெரிவித்தார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பஞ்சாப்,ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் பல்லாயிரம் பேர் டெல்லியில் முகாமிட்டு 12 நாட்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். மத்திய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டவில்லை. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ரத்து செய்வீர்களா
விவசாயிகளின் கோரிக்கை ஒன்றை கோரிக்கையாக உள்ளது. அதாவது அதாவது சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வீர்களா இல்லையா என்ற ரீதியில் மட்டுமே உள்ளது. அதற்கு அரசிடம் ஆம், இல்லை என்ற பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
பந்த்
இதனிடையே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்களும் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்புகளும் இன்று பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் கேரள மாநில வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் விவசாய சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் விவசாய சட்டங்களை கேரளாவில் செயல்படுத்த மாட்டோம். மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக இந்த வாரத்திலேயே உச்சநீதிமன்றத்தைதை நாடுவோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொதுவிநியோக முறை
மத்திய அரசின் வேளாண் சட்டம் என்பது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட. மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதாகும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பறிக்கும் புதிய சட்டங்கள், பெருநிறுவன நிறுவனங்களின் உணவு சந்தையை ஒப்படைக்கும், இது நமது பொது விநியோக முறையை அழிக்கும்" என்றார்.