கேரளாவில் புதுமை... செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி... வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு!!
திருவனந்தபுரம்: நாட்டிலேயே சுகாதாரத்துக்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் மற்றும் உயர் தொழில்நுட்பத்தை கொண்டு சிகிச்சை அளிக்கும் மாநிலம் கேரளா. அடுத்த கட்டமாக செவிலியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை உலக நாடுகளுக்கு அனுப்ப இருப்பதாக அந்த மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர் தாமஸ் இசாக் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய பின்னர் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், இந்த துறையில் உயர்தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என்று பல நாடுகளுக்கும் அக்கறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சில மாநிலங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கேரளா உணர்ந்துள்ளது.
கேரளாவில்தான் முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து முதல் கொரோனா நோயாளி வந்தவுடன் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். இந்த மாநிலத்தில் இன்றும் கொரோனா இறப்பு சதவீதம் குறைவாகவே இருக்கிறது. நிபா வைரஸ் இந்த மாநிலத்தில் ஏற்பட்டு இருந்த காரணத்தினால் அந்த அனுபவம் இவர்களுக்கு அதிகமாக கை கொடுத்தது.
பொதுவாக கேரளாவில் பெண்கள் அதிகளவில் செவிலியர் பணிக்கு படிப்பது உண்டு. அவ்வாறு படிப்பவர்கள் இன்றும் நாடு முழுவதும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பணியில் உள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர் தற்போது அதிகளவில் செவிலியர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், கேரளாவில் செவிலியர்களுக்கு அதிகளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட இருப்பதாக அந்த மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் இசாக் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் செவிலியர்களின் குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கும். அந்த வருமானம் மாநிலத்துக்கும் வருமானமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மொத்தம் 10.. சென்னை, மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்.. கொரோனா பலி எண்ணிக்கையில் சந்தேகம்
ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கும் கேரள பணியாளர்கள் மூலம் அந்த மாநிலத்துக்கு பெரிய வருமானம் கிடைத்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் இருக்கும் மாநிலமும் கேரளாதான். கடந்தாண்டில் மட்டும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் அந்த மாநிலத்துக்கு 80 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளில் இருந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் வேலை இழந்துள்ளனர். ஆனால், மாநிலத்துக்கு கிடைக்கும் வருமானத்தில் உடனடி சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூற முடியாது, மாநிலத்துக்கு வருபவர்கள் தங்களுடன் பணத்தையும் கொண்டு வருகின்றனர் என்று அமைச்சர் தாமஸ் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த வருமானம் 14.8% அதிகரித்து, 20.6 பில்லியன் டாலராக இருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாமஸ் கூறுகையில், ''மாநிலத்துக்கு வருமானம் சுருங்கும்போது, கட்டிட பணிகள் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட்டில் பாதிப்பு காணப்படும். நாட்டிலேயே தனி நபர் நுகர் செலவினம் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது. கொரோனா கால கட்டத்தில் மாநிலம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தொழில்நுட்ப கட்டமைப்புகளில் புதுமை, மாநிலத்துக்குள் நிறுவனங்களை இடம் மாற்றி அமைத்துக் கொள்ள கடன் வழங்குவது, வட்டியில் சலுகை வழங்குவது என்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் கட்டமைப்பு முதலீட்டுக்கு என்று 6.7 பில்லியன் டாலர் கடன் பெறப்படும். சுகாதாரத்துறைக்கு பெரிய அளவில் கவனம் செலுத்தப்படும்'' என்றார்.