கேரளாவில் கொடூரம்... காதல் திருமணம் செய்த இளைஞர்... மனைவி வீட்டினரால் படுகொலை... ஆணவக் கொலையா?
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர், மனைவி குடும்பத்தினரால் வெட்டி கொல்லப்பட்டார். இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்த பிறகு கூட அனீஷிடம் என் குடும்பத்தினர் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் எனது கணவர் உயிரிழந்து இருக்க மாட்டார் என அந்த இளைஞரின் மனைவி தெரிவித்தார்.
இந்த குற்றசாட்டை மறுத்துள்ள போலீசார், இந்த புகார் மீது விசாரணை நடத்தினோம். இந்த பிரச்சினையை தீர்க்க இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று கூறியுள்ளனர்.
காதல் மலர்ந்தது
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 27). பெயிண்டர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஹரிதா என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஹரிதா தமிழக வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஹரிதா வசதி படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர்.
திருமணம் செய்தனர்
இதனால், இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஹரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஹரிதாவும், அனீஷும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அனீஷின் வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகும் ஹரிதாவின் தந்தை வீட்டில் இருந்து இருவருக்கும் தொடர்ந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
படுகொலை
இதுதொடர்பாக அனீஷின் தந்தை ஆறுமுகம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றிருந்த அனீஷ், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
ஆணவ கொலையாக இருக்கலாம்
அனீஷுடன் பைக்கில் வந்த அருண் என்பவர், ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் ஆகியோர் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரித்தார். அதன் அடிப்படையில் சுரேஷ், பிரபு குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குஜல்மன்னம் போலீசார் கொலை வழக்கின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், 'ஆணவக் கொலை ரீதியில் இந்தத் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்புதான் இது ஆணவக் கொலையா? என்பதை உறுதிப்படுத்த முடியும்' என்று கூறினர்.
போலீசார் நடவடிக்கை இல்லை
சோகத்தில் மூழ்கியுள்ள அனீஷின் மனைவி ஹரிதா கூறியதாவது:- எங்கள் காதலை ஏழ்மையும் சாதியையும் காரணம் காட்டி என் வீட்டினர் ஏற்கவில்லை. நாங்கள் திருமணம் செய்த பிறகு கூட அனீஷிடம் என் குடும்பத்தினர் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். ஒருமுறை என்னுடைய மாமா சுரேஷ் வீட்டுக்கு வந்து எங்களை மிரட்டி விட்டு என்னுடைய போனையும் பிடுங்கிச் சென்றார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் எனது கணவரை நான் இழந்திருக்க மாட்டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
நடவடிக்கை எடுத்தோம்
ஆனால் ஹரிதாவின் குற்றசாட்டை போலீசார் மறுத்துள்ளனர். இதுபற்றி பாலக்காடு எஸ்.பி. கூறுகையில், கேரளா உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்குஇரண்டு நாட்களுக்கு முன்பு அனீஷின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வேளையில் போலீசார் தேர்தல் பணியில் முழு வீச்சுடன் இருந்தனர். ஆனாலும் கூட இந்த புகார் மீது விசாரணை நடத்தினோம். இந்த பிரச்சினையை தீர்க்க இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார்.
தொடர்கின்றன
கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2018-ல் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கெவின் பி ஜோசப் என்ற தலித் கிறிஸ்தவ இளைஞர், அவரது மனைவி நீனுவின் குடும்பத்தினரால் கொல்லப்பட்டார். தமிழகத்தின் உடுமலை சங்கர் கொலை சம்பவத்தைப்போல கேரளாவில் இந்தக் கொலை சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் அதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.