அடிப்படை உரிமைகள் தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த கேசவானந்த பாரதி காலமானார்
திருவனந்தபுரம்: அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை சட்டப் போராட்டங்கள் மூலம் பெற்றுத் தந்த கேரளா மடாதிபதி கேசவானந்த பாரதி (வயது 80) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் எட்னீர் மடாதிபதி கேசவானந்த பாரதி. உடல்நலக் குறைவால் கர்நாடகாவின் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவானந்த பாரதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அவரது மறைக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேசவானந்த பாரதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை விழுமியங்களைப் (Basic Structure of the Constitution) பாதுகாப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் வழக்கினைத் தொடுத்தவரான கேசவானந்த பாரதி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி துயரத்தை அளிக்கிறது.
கேரளாவில் நிலச் சீர்திருத்தத் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கேசவானந்த பாரதி அவர்கள் தொடர்ந்த ஒரு வழக்கு, உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, 13 நீதியரசர்களைக் கொண்ட மாபெரும் அரசியல் சட்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையினைக் கொண்டு, அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்குக் கடிவாளம் போட்ட அந்த வழக்கின் தீர்ப்பு; இன்றுவரை 'கேசவானந்த பாரதி' வழக்கு என்றே வரலாற்றில் புகழ்ப் பெயர் பெற்று நிலைத்துள்ளது.
யார் அந்த கருப்பு ஆடு.. திமுக குறித்த "அந்த" தகவல்.. ரஜினி காதுக்கு போயிருக்காமே... பரபரக்கும் களம்!
1973-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான; மதச்சார்பின்மை - கூட்டாட்சித் தத்துவம், இவற்றைப் பாதுகாப்பதற்கான வாளும் கேடயமுமாக விளங்குகிறது.
மக்களாட்சி எனும் மலைக்கோட்டையின் மதில்களைக் காத்து உறுதிப்படுத்துவதற்குக் காரணமான வழக்கைத் தொடுத்து, இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கத் துணை நின்ற கேசவானந்த பாரதி அவர்களின் மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.