"சேட்டா சேட்டா நிறுத்துங்க".. ஓடி வந்த தேவதைக்கு .. கைவசமானது அழகான வீடு.. காரணம் அந்த ஈர மனசு!
சுப்ரியாவுக்கு ஜாய் ஆலுக்காஸ் புது வீடு ஒன்றினை பரிசாக தந்துள்ளது
திருவனந்தபுரம்: "சேட்டா... சேட்டா.. பஸ்ஸை நிறுத்துங்க" என்று கத்தி கொண்டே ஓடிவந்து, பார்வையற்ற முதியவருக்கு உதவிய சுப்ரியாவுக்கு சூப்பர் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது!
கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் சுப்ரியா... இவர் அங்குள்ள ஜாலி சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் வைரலானது.
சம்பவத்தன்று, வழக்கம்போல் வேலை முடிந்து சுப்ரியா வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கண்பார்வையற்ற முதியவர் ஒருவர் பஸ் ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்திருக்கிறார்.
சேட்டா.. எந்தா இது.. கோர்ட்டுக்குப் போகாமல்.. கேரளத்து கலகல போலீஸ் டிக்டாக்!
முதியவர்
இதை பார்த்த சுப்ரியா முதியவரிடம் எங்கே போகணும் என்று கேட்கவும், பத்தனம்திட்டாவில் உள்ள மஞ்சடிக்கு போக வேண்டும் என்று அந்த முதியவர் சொல்லி உள்ளார். அதனால் பஸ் ஸ்டாண்டுக்கு பெரியவரை கைப்பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தபோது, திருவல்லா போக கூடிய பஸ் ரோட்டில் மெதுவாக சென்று கொண்டிருப்பதை பார்த்ததும், "பஸ்ஸை நிறுத்துங்க" என்று கத்திக் கொண்டே ஓடிப்போய் நிறுத்தினார் சுப்ரியா.
சுப்ரியா
மூச்சிறைக்க இவர் ஓடிவருவதை பார்த்ததும் கண்டக்டரும் பஸ்ஸை நிறுத்திவிட்டார்.. அதன்பிறகுதான் தகவலை சொல்லி கண்டக்டரிடம் சொல்லி, திரும்பவும் மூச்சிறைக்க ஓடிப்போய் முதியவரின் கையை பிடித்து கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டார் சுப்ரியா. இந்த காட்சியை அங்கிருந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஜோஷ்வா என்பவர் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட, அதுதான் வைரலானது.
வாழ்த்து
சுப்ரியாவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லி வந்தனர்.. இந்த வீடியோவை பார்த்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் சுப்ரியாவை அவருடைய வீட்டில் சென்று பார்த்து வாழ்த்துகள் தெரிவித்தார்... மேலும் திருச்சூரில் இருக்கும் தலைமை நிறுவனத்தில் வந்து தன்னை சந்திக்குமாறும் கூறியிருந்தார். அதன்படியே சுப்ரியாவும், தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.
ஜாய் ஆலுக்காஸ்
அப்போது, அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் சுப்ரியாவிற்கு வீடு ஒன்று வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஜாய் ஆலுக்காஸ்... இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்ரியா "மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கண்ணீருடன் நா தழுதழுக்க ஊழியர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
சூப்பர் பரிசு
சுப்ரியாவிற்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்... இவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்... தற்போது சுப்ரியாவிற்கு கிடைத்துள்ள சூப்பர் பரிசுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.