30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி?.. நிபுணர்கள் கூறுவது என்ன?
திருவனந்தபுரம்: கனமழையால் விமானியின் பார்வை தடைப்பட்டதே கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1344 விமானம் நேற்று மாலை துபாயிலிருந்து 4.45 மணிக்கு புறப்பட்டது. அங்கிருந்து கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்தடைந்தது.
அப்போது விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது ஓடுபாதையிலிருந்து சறுக்கியது. உடனே விமானி விமானத்தை மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சித்தார். அப்போது அந்த விமானம் சறுக்கிக் கொண்டு 35 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
கேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை
மலைபாங்கான ரன்வே (table top) என்பதால் விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. காக்பிட், முன் கதவுக்கு இடையே விமானம் இரண்டாக உடைந்தது. காக்பிட்டிற்கு பின்னால் உட்கார்ந்திருந்த பயணிகள் கடுமையாக காயமடைந்தனர்.
மலப்புரம் மருத்துவமனை
அவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கு கனமழையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் தரையிறங்கும் போது அங்கிருந்த இருட்டும், கனமழையும் விமானியின் பார்வைக்கு தடையை ஏற்படுத்தியதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
19 பேர் பலி
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட்ட இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயிலிருந்து சறுக்கிக் கொண்டு கொண்டோட்டி- குன்னும்புரம் சாலையில் உள்ள மேலாங்குடி சாலை பகுதியில் விழுந்தது. இதில் விமானி தீபக் வசந்த சாத்தே, துணை விமானி அகிலேஷ் உள்பட 19 பேர் பலியாகிவிட்டனர்.
6 விபத்துகள்
விமானம் தரையிறங்கும் போது அதிக வேகத்துடன் வந்ததும் காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியும் தீவிரமடைந்துள்ளது. இந்த ஓடுதளத்தில் இதுவரை 6 விபத்துகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.