எங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன?.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்
திருவனந்தபுரம்: எங்கும் மரண ஓலம், ஆங்காங்கே உதவிக்கு அழைத்த மக்கள் என கோழிக்கோடு விமான விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த விபத்தில் உயிர் பிழைத்தவர் விளக்கினார்.
கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் 35 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்துவிட்டது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் பலியாகிவிட்டனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விபத்து சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த கே கே ரியாஸ் (26) கூறுவதை கேட்போம். இவர் கோழிக்கோட்டில் உள்ள வெலிமன்னா கிராமத்தை சேர்ந்தவர். துபாயில் சேல்ஸ்மேனாக பணியாற்ற 6 மாதங்களுக்கு முன் சென்றார். லாக்டவுனால் தற்போது தாயகம் திரும்பிய போது அவர் விமான விபத்தில் சிக்கினார்.
மலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்!
அதிர்ஷ்டம்
கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரியாஸ். அவர் கூறுகையில் இந்த விபத்தில் என் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் உயிரிழந்துவிட்டார். பெரும்காயம் அடையாதது நான் செய்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ரன்வேயை விமானம் நெருங்கியது. அப்போது விமானம் அதிர்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
கால் மீது விழுந்த கருவி
ஆனால் அடுத்த சில வினாடிகளில் என்ன நடந்தது என என்னால் நினைவுக் கூர முடியவில்லை. அப்போது நான் பார்த்த போது நான் விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்தேன். என்னால் கைகளையும், கால்களையும் அசைக்க முடியவில்லை. என் தலை மேல் இருந்த ஒரு எலக்ட்ரிக் கருவி என் கால் மீது விழுந்துவிட்டது. இதில் நான் சிக்கிக் கொண்டேன்.
உறவினர்
எனது முகத்தின் மேல் எனது வலது கை இருந்தது, அது எனது மூக்கை அழுத்திக் கொண்டு இருந்தது, என்னால் கைகளையும் கால்களையும் அசைக்க முடியாததால் மூச்சுவிட சிரமமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் அலறல்களை கேட்டேன். நிறைய பேர் உதவிக்கு அழைத்தனர். எனது சீட்டுக்கு அருகே உட்கார்ந்திருந்த ஒருவர் இறந்துவிட்டதாக அவருடைய உறவினர் கூறியதை நான் கேட்டேன்.
உட்கார்ந்திருந்தேன்
ஜன்னலோர சீட்டில் நான் உட்கார்ந்திருந்ததால் என்னால் எனது தலையை திருப்ப முடியவில்லை. சில மணி நேரம் கழித்து சிலர் வந்து என்னை வெளியே எடுக்க முயற்சித்தனர். அப்போது அவர்களால் முடியாததால் தீயணைப்பு துறையினர் வருவார்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். நான் முன் சீட்டுக்கும் எனது சீட்டுக்கும் இடையே சிக்கி கொண்டதால் தீயணைப்பு துறையினர் வந்து சீட்டுகளை பிரித்து என்னை இரவு 11 மணிக்கு மீட்டனர் என்றார் ரியாஸ்.