கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது
திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கருப்பு பெட்டியை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Recommended Video
துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு 184 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது கனமழையால் விமானம் சறுக்கி விபத்துக்குள்ளானது. விமானம் சுமார் 35 அடி ஆழத்தில் விழுந்துவிட்டது.
இதில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். இந்த விமானம் தரையிறங்கும் போது வேகத்தில் வந்ததாகவும், விமானத்தை தரையிறக்க விமானிக்கு சவாலாக இருந்ததாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
கோழிக்கோடு டேபிள் டாப் ஏர்போர்ட் மோசம்.. இது விபத்தல்ல, கொலை.. கொதிக்கும் விமான பாதுகாப்பு நிபுணர்
தரையிறக்க
மேலும் டேபிள் டாப் எனப்படும் மலைப்பாங்கான ஓடுதளத்தில் ஒரு விமானத்தை மேல் நோக்கி எடுப்பதும், தரையிறக்குவதும் அத்தனை கடினம் அல்ல என்கிறார்கள் நிபுணர்கள். இது போன்ற மலைபாங்கான ரன்வேக்களில் விமானத்தை தரையிறக்குவதற்கென விமானிக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மனித தவறுகள்
இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கனமழை பெய்து வந்ததால் விமானத்தை கோழிக்கோட்டில் தரையிறக்க வைக்காமல் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிட்டிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
கேள்விகள்
மேலும் ஏற்கெனவே மலைபாங்கான பாதை இதில் மழை வேறு எதற்காக இந்த ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுகின்றன. எனவே விமானத்தை தரையிறக்க யார் சிக்னல் கொடுத்தது, விமான கட்டுப்பாட்டு அதிகாரி கனமழை குறித்து விமானியை எச்சரிக்கவில்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
முக்கியமானது
இந்த நிலையில் ஒவ்வொரு விமான விபத்திற்கும் முக்கியமானது கருப்பு பெட்டியாகும். இந்த கருப்பு பெட்டி, அதாவது டிஜிட்டல் விமான தகவல் பதிவு செய்யும் கருவி என அழைக்கப்படும் இந்த கருவி விமானத்தில் இருந்தே கண்டெடுக்கப்பட்டது. அது போல் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி இரு பகுதிகளை கொண்டுள்ளது. ஒன்று டேட்டா ரெக்கார்ட்ர் மற்றொன்று வாய்ஸ் ரெக்கார்டர்.
சேதமடையவில்லை
விமானம் உடைந்த போதிலும் இந்த பெட்டிகள் சேதமடையவில்லை. இதன் மூலம் விமான விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவரும். இந்த கருப்பு பெட்டி மூலம் விமானம் புறப்பட்ட இடத்திலிருந்து தரையிறங்கியது வரை 24 மணி நேரத்துக்கான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.
விமானத்தின் திசை
விமானம் புறப்பட்ட போது ஏற்பட்ட வேகம், விமானத்தின் திசை, தரையிறங்கிய போது வேகம், தரையிறங்கிய போது காற்றின் அழுத்தம் என்ன, விமானத்தை நிறுத்துவதற்காக முயற்சித்தும் ஏன் அதில் விமானி வெற்றி பெறவில்லை உள்ளிட்ட தகவல்கள் அதில் கிடைக்கும். இதன் மூலம் விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணத்தை கண்டறிய முடியும்.
காக்பிட்
அது போல் சிவிஆர் எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்பது காக்பிட்டில் உள்ள விமானிகள் தங்களுக்கு நடத்திய உரையாடல் குறித்தும், அவர்கள் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேசியது குறித்தும் தரையிறக்குவதற்கு அந்த அதிகாரி அறிவுறுத்தியது என்ன, விமானிகளின் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்தும் தெரியவரும்.