வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிப்பத்திரம் கொடு... பிறகு தான் சீட்... கோழிக்கோடு பல்கலை. அதிரடி..!
திருவனந்தபுரம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் ஒழிக்கும் விதமாக கோழிக்கோடு பல்கலைக்கழக நிர்வாகம் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் வரதட்சணை பெற மாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
கடைசி நிமிஷத்தில்.. மூச்சிரைக்க ஓடிவந்து மனுதாக்கல் செய்த பெண்.. மலைமக்கள் ஆவேசம்.. ஆம்பூர் பரபரப்பு
வரதட்சணை
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் புதுமணப் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. வரதட்சணைக்கு எதிராக பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அது முழுமையாக மக்களை சென்றடையவில்லை. அண்மையில் கொல்லத்தை சேர்ந்த மருத்துவர் விஸ்மயா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அம்மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கேரள ஆளுநர்
இதையடுத்து இது குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்ட கேரள ஆளுநர் சையது ஆரிஃப் கான், பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் வரதட்சணை ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துணை வேந்தர்களை கேட்டுக்கொண்டார். அதன்படி கோழிக்கோடு பல்கலைக்கழகம் நிர்வாகம், வரதட்சனை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுப்பவர்களுக்கு மட்டுமே கல்லூரிப் படிப்புகான சீட் வழங்கப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
உழைத்து முன்னேறு
மேலும், வரதட்சணை பெறுவது கீழ்த்தனமான செயல் என்றும் உழைத்து முன்னேறுவது குறித்தும் அந்த உறுதிமொழி பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகள் என மொத்தமாக சேர்த்து ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இன்றைய மாணவர்கள் நாளைய மாப்பிள்ளைகள் என்பதால் கோழிக்கோடு பல்கலைக்கழகம் இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறது.
சட்டப்படி
பல்கலைக்கழகத்தில் கொடுத்துள்ள உறுதிமொழி பத்திரத்தை மீறும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால், பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் பல்கலைக்கழகத்தை நாடி தங்கள் மாப்பிள்ளையின் கல்வியாண்டு உள்ளிட்ட விவரத்தை கூறி அவர் கையெழுத்திட்டு கொடுத்திருந்த உறுதிமொழி பத்திரம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த பல்கலைக்கழகத்தை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் வரதட்சணை ஒழிப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.