காவல்துறையில் 'எந்திரன்' சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள்
Recommended Video
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக காவல் துறையில் ரோபோக்கள் பணியாற்றும் திட்டத்தை கேரள அரசு துவக்கியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' திரைப்படத்தில் ராணுவத்திற்கு உதவுவதற்காக ரோபோ -வை உருவாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டு இருக்கும். அந்த வகையில், தற்போது, காவல் துறையில் KP-BOT என்ற ரோபோக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் காவல் துறையில் ரோபோக்களை இயக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக மாறியுள்ளது. திருவணந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ரோபோக்களின் பணியை துவக்கி வைத்தார்.
இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது. மேலும் காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கம் அளித்துள்ளார். மேலும், காவல் அதிகாரி போலவே இந்த ரோபோவுக்கு உடை அணிவிக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
நான்கு பேர் செய்யக் கூடிய பணியை இந்த ரோபோ தனியாக சமாளிக்கும் திறன் கொண்டது. புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இந்த KP-BOT வகை ரோபோ மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.