இப்படியும் ஒரு பலசரக்கு கடையா...? எர்ணாகுளத்தில் அசத்தும் எம்.டெக் பட்டதாரி இளைஞர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஜீரோ பிளாஸ்டிக் முறையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார் எம்.டெக் பட்டதாரியான பிட்டு ஜான் என்ற இளைஞர்.
தனது கடை முழுவதும் கண்ணாடி ஜார்களை மட்டுமே வைத்து அதன்மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
சுற்றுச்சூழல் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவும், சூழலியலை பாதுகாப்பதில் தன்னால் முடிந்த பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த ஜீரோ பிளாஸ்டிக் முறையை பின்பற்றி வருகிறார் ஜான்.
வெளிநாட்டு பயணம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற ஊரில் கிரீன் ஸ்டோர் என்ற பெயரில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார் பிட்டு ஜான் என்ற இளைஞர். எம்.டெக் பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் மீது பேரார்வம் மிக்கவர். படித்த படிப்புக்கேற்றவாறு பெங்களூரில் பணியாற்றி வந்த அவர், அலுவலக பயணமாக ஒரு முறை லண்டன் சென்ற போது அங்கிருந்த ஜீரோ பிளாஸ்டிக் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றை பார்த்துள்ளார். இதேபோல் தனது ஊரில் கடை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த பிட்டு ஜான் ஊர் திரும்பியதும் அது தொடர்பாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.
பல லட்சங்களில்
பொறியியலில் இரண்டு பட்டங்கள் பெற்று மாதம் லட்சங்களில் ஊதியம் பெற்ற மகன், திடீரென பல சரக்கு கடை நடத்துவதாக கூறினால் எந்த பெற்றோர் தான் ஏற்பார்கள். இதனால் பிட்டு ஜான் கூறிய விருப்பத்தை முதலில் ஏற்க மறுத்த அவரது பெற்றோர், பின்னர் மகனின் புதுமையான முயற்சிக்கு இசைவு தெரிவித்தனர். இதையடுத்து கொத்தமங்கலத்திலேயே கிரீன் ஸ்டோர் என்ற பெயரில் கடையை தொடங்கிய பிட்டு ஜான், தனது கடையில் ஒரு சிறிய பிளாஸ்டிக்கிற்கு கூட இடமளிக்கவில்லை.
ரூ.45 லட்சம் மதிப்பில்
கடை முழுவதும் கண்ணாடி ஜார்களும், பேப்பர் பைகளும் மட்டுமே பயன்படுத்தும் இவர், கிரீன் ஸ்டோரின் உட்கட்டமைப்பு வசதிக்காக மட்டும் ரூ.45 லட்சம் செலவழித்துள்ளார். அதாவது தனது சேமிப்புத் தொகை அனைத்தையும் சூழலியலை காக்க வேண்டும் என்ற முனைப்பில் பயன்படுத்தியுள்ளார். இதனிடையே இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றிடம் பேசிய அவர், நாளொன்றுக்கு 200 முதல் 250 வாடிக்கையாளர்கள் வரை வந்து செல்வதாகவும், மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
ஊக்குவிப்பு
ஜானின் இந்த சீரிய முயற்சியை முன்னுதாரணமாக கொண்ட பலரும், ஜீரோ பிளாஸ்டிக் முறையில் அங்காடிகள் திறக்க அவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கடையின் உட்கட்டமைப்பை நிறுவுவது, பராமரிப்பது என சந்தேகங்கள் கேட்டுள்ளனர். இவரும் பிளாஸ்டிக் இல்லாத் நிலை உருவாக வேண்டும், சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னிடம் ஆலோசனைகள் கேட்பவர்களுக்கு உரிய யோசனைகள் அளித்து ஜீரோ பிளாஸ்டிக் முறையில் கடைகள் நிறுவ வழிகாட்டி வருகிறார்.