சாத்தான்குளம் தந்தை,மகன் மரணம்... நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மலையாளிகள்
திருவனந்தபுரம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கோரி கேரளாவில் மலையாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகம் அருகே டி.ஐ.என்.எஸ். என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் தந்தை மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தாங்கள் துணை நிற்போம் என்றும் தமிழர்களை தாங்கள் சகோதரர்களாகவே பார்ப்பதாகவும் கூறினர்.
சாத்தான்குளம் ஸ்டேசன் ஏட்டு முதல் தூத்துக்குடி எஸ்பி வரை ட்ரான்ஸ்பர் - அதிரடி பின்னணி
தந்தை மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கும் சர்ச்சைக்கும் அப்படி என்ன தான் பந்தமோ தெரியவில்லை, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி மக்களின் வசவுகளுக்கு உள்ளாகி வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் என இருவர் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் தலைப்புச் செய்திகளில் இது இடம்பிடித்து வருகிறது.
கடும் கண்டனங்கள்
ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் மரணத்திற்கான காரணங்களாக வெளிவரும் ஒவ்வொரு தகவலும் பொதுமக்களை கொந்தளிக்க செய்துள்ளது. மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பக்கூடாது என்பதற்காக வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
மலையாளிகள்
இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்தும், ஜெயராஜ்,பெனிக்ஸ் மரணத்திற்கு காரணமானவர்கள் எனக் கூறப்படும் இரண்டு எஸ்.ஐ.க்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும் திருவனந்தபுரத்தில் டி.ஐ.என்.எஸ். என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக கருத்து கூறியுள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், தமிழர்களை தாங்கள் சகோதரர்களாகவே பார்ப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தாங்கள் துணை நிற்போம் எனவும் தெரிவித்தனர்.
தமிழகத்தை தாண்டி
இதேபோல் அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஜெயராஜ்,பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் வழக்கு இப்படி எல்லை கடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.