ஓடிசாவில் மைனர் சிறுமி பலாத்காரம்... தடுக்க வந்த தாயை வெட்டிக்கொன்ற கொடூரன் கைது
மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த போது அதை தடுக்க வந்த தாயை வெட்டிக்கொன்று விட்டு தலைமறைவான நபரை கேரளாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்: காம வெறி ஏறினால் கண்ணை மறைத்து விடும், புத்தியும் மழுங்கிவிடும் போல. ஓடிசாவில் இளம் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்திருக்கிறான் ஒரு காமுகன், தடுக்க வந்த அந்த பெண்ணின் தாயையும் வெட்டி கொலை செய்திருக்கிறான். ஓருமாதகாலம் தலைமறைவாக இருந்த அந்த கொடூரனை காவல்துறையினர் கேரளாவில் கைது செய்துள்ளனர். கொலையாளியின் பெயர் பிஜயா பெகெரா என்பதாகும். குமாரி கிராமத்தில் வசித்து வருகிறான்.
ஓடிசா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் மே 4ஆம் தேதியன்று ஒரு சிறுமியும், தாயும் மலைப்பகுதியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற இளைஞர்களிடம் ஈனஸ்வரத்தில் உதவி கேட்டாள் அந்த சிறுமி. உடனடியாக இளைஞர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் தாயார் போகும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் விக்கி என்பவனும், பிஜயா என்பவனும் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். நடந்த சம்பவத்தை அழுது கொண்டே போலீசில் கூறினார். தடுக்க வந்த தனது தாயை வெட்டிக்கொன்றதாகவும் தெரிவித்தார். விக்கி என்பவனும் பிஜயா என்பவனும் தன்னை சீரழித்து விட்டதாக கூறவே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
கடந்த மே 2ஆம் தேதி இரவு பிஜயா தனது கூட்டாளியுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை டியூலி மலைப்பகுதிக்கு தூக்கிச் சென்று போய் பாலியல் பலாத்காரம் செய்தான். அதை தடுக்க போராடிய சிறுமியின் தாயை கொடூரமாக வெட்டிக்கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான்.
இதில் விக்கியை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பிஜயா பெகராவை தேடி வந்தனர். செல்போனை வைத்து தேடி வந்ததில் அவன் கேரளாவில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஓடிசா போலீசார், விமானம் மூலம் விரைந்து சென்று பிஜயா கைது செய்து அழைத்து வந்தனர்.
இருவர் மீதும் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.