30 வருடங்களுக்கு பிறகு.. "வரலாற்று சாதனையை நோக்கி" இடதுசாரிகள்.. கேரளாவில் பட்டொளி வீசும் "செங்கொடி"
திருவனந்தபுரம்: கொரானா நோய் பரவல்.. தங்க கடத்தல் வழக்கு.. இப்படி எத்தனையோ குற்றச்சாட்டுகளை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அரசு மீது, காங்கிரசும், பாஜகவும் முன்வைத்தாலும்.. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மீண்டும் இடதுசாரிகள் கேரளாவில் அமோக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல்கள், அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என்று அரசியல் விமர்சகர்கள் வர்ணிக்கப்பட்டது.
சுமார் ஐந்து வருடங்களை நெருங்கிவிட்ட பினராயி விஜயன் தலைமையிலான அரசின் மீது மக்கள் வைத்துள்ள கருத்தை மதிப்பீடு செய்யும் தேர்தல் இது என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். எனவே தான் ஒவ்வொரு கட்சியும் விழுந்தடித்து தேர்தல் பணியாற்றியது.
நகரங்களிலும் சறுக்கிய பாஜக.. மாநகராட்சிகளை வெல்ல முடியவில்லை.. திருவனந்தபுரத்தில் மட்டும் 2வது இடம்
இடதுசாரிகள் முன்னிலை
மதியம் நிலவரப்படி 941 பஞ்சாயத்துகளில் 500 பஞ்சாயத்துகளுக்கும் மேல், இடதுசாரிகள் கூட்டணி முன்னணியில் உள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 10 இடங்களில் இடதுசாரிகள் முன்னிலையில் இருக்கிறார்கள். பிளாக் பஞ்சாயத்துகளை பொறுத்தளவில் 152 இடங்களில் 110 இடங்களில் ஆளும் கூட்டணிதான் முன்னணியில் இருக்கிறது.
சட்டசபை தேர்தல் முன்னோட்டம்
நான்கு மாநகராட்சிகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டு மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. கிட்டத்தட்ட அமோக வெற்றியை பதிவு செய்துவிட்டது இடதுசாரி கூட்டணி. கேரள அரசியல் வரலாற்றில் கடந்த 30 வருடங்களில் எந்த ஒரு கட்சியும் சட்டசபை தேர்தலில் வென்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தது கிடையாது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் மாறி மாறி அங்கு ஆட்சியை பிடித்து வருகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து பார்த்தால், இந்த நிலைமையை மாற்றி பினராயி விஜயன், பழையபடி முதல்வராகும் வாய்ப்பு தெளிவாக இருக்கிறது.
முதல்வரின் நல்ல பணிகள்
எப்படி சாத்தியப்பட்டது இந்த அதிசயம்? இதில், முதல்வர் செயல்பாடுகளை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதி மேம்பாடு பினராயிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சமூக நல ஓய்வூதிய திட்டங்களை அதிகரித்தது, முதியோருக்கு அரசு நிதி உதவி வழங்கியது, அதிகப்படியான உயிர்பலி இல்லாமல் கொரோனா வைரஸ் பரவலை கையாண்டது போன்றவை மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றுக் கொடுத்தது. அந்த பலனை இப்போது தேர்தலில், வாக்குகளாக, அறுவடை செய்துள்ளது இடதுசாரிகள் கூட்டணி.
துணிந்து சொன்ன 'சகாவு'
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், எந்த ஒரு ஆளுங்கட்சியும் சொல்லாத ஒரு வார்த்தையை துணிந்து சொல்லியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. "அரசின் நன்மதிப்புக்கு மக்கள் அளிக்கக்கூடிய சான்று" என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதற்கு தனி "தில்" இருக்க வேண்டும். கண்டிப்பாக சகாவுக்கள் அந்த துணிச்சலுக்கு சொந்தக்காரர்கள்தான். சொல்லி அடித்த கில்லி போல.. கிராமப்புறங்களிலும் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இடதுசாரிகள் கூட்டணி.
காங்கிரஸ் இடங்களிலும் வேட்டு
பாரம்பரியமாக ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் போன்ற பகுதிகளில் கூட ஊடுருவி வெற்றியை பதிவு செய்துவிட்டது இடதுசாரிகள் கூட்டணி. வெறும் நலத்திட்ட பணிகள் மட்டும் கிடையாது சூப்பரான ஒரு கூட்டணியை அமைத்ததிலும் பினராயிக்கு ஹேட்ஸ்ஆப் சொல்ல வேண்டும். ஜோஸ் கே.மணி தலைமையிலான, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியுடன் அமைந்த கூட்டணியால், கணிசமான, விவசாயிகள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாக்குகள் இடதுசாரிகள் கூட்டணி கிடைத்தது.
30 வருடங்களுக்கு பிறகு
தங்களது வழக்கமான ஓட்டு வங்கியையும் மார்க்சிஸ்ட் தக்கவைத்துக் கொண்டது. கோழிக்கோடு, திருவனந்தபுரம் போன்ற தனது செல்வாக்கு மிக்க பகுதிகளில் மீண்டும் செங்கொடியை பறக்க விட்டுள்ளது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் மீண்டும் இடதுசாரிகள் முடிசூடி, 30 ஆண்டுகால கேரள அரசியல் பாரம்பரியத்தை புரட்டிப்போடும் சூறாவளியாக மாறுவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக இருக்கிறது.