ஆசையாக சென்ற சுற்றுலா.. ஆபத்தான மூணாறு பள்ளத்தில் விழுந்த கார் - தாய் மகன் உயிரிழந்த பரிதாபம்
திருவனந்தபுரம்: மூணாறு அருகே சுற்றுலா பயணிகள் சென்ற கார் 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் எட்டு வயது சிறுவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கேரள மாநிலம் மூணாறு நோக்கி காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார் மூணாறு அருகே பெரிய கானல் பகுதியில் உள்ள கேப் ரோடு என்ற மலைப்பாதையில் பயணித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது.
தரிகெட்டு ஓடிய கார் சாலையை விட்டு விலகிச்சென்று அருகே இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மூணாறில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் 8 வயது சிறுவன் நைசா மற்றும் அவரது தாய் நவ்ஷத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மூணாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவுக்காக மகிழ்ச்சியோடு சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.