முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலையில் உள்ளது.. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலையில்தான் உள்ளது, அணையை உடனே கைவிட்டுவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் மீண்டும் கேரளா தமிழ்நாடு இடையே பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையை 139க்கும் கீழாக குறைக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கேரள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் இந்த அணையை மொத்தமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை .. வேண்டாத வேலை பார்க்கும் கேரளா.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..
வழக்கு
இந்த மனுவில், இந்த அணை மிகவும் பழமையானது. அணை பாதுகாப்பானதாக இல்லை. இதனால் அணையின் நீர் மட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழ் கொண்டு செல்ல வேண்டும். அணையின் துணை கண்காணிப்பு குழுவை கலைக்க வேண்டும். அதோடு அணையின் முழுமையான கட்டுப்பாடு, பாதுகாப்பு பணிகளை கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய அரசு அவசியம் இல்லை
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, கேரளாவில் இப்போது மழை பெய்தாலும் அணை முழுமையாக நிரம்பவில்லை. அணையில் தற்போது 137 அடி அளவுதான் நீர் இருக்கிறது. முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது பின்பற்றப்படும் அளவை தொடரலாம். இதில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்ய விரும்பினால் அதை பின்பற்ற தயார் என்று மத்திய அரசு கூறியது.
தமிழ்நாடு அரசு பதில்
இதற்கு தமிழ்நாடு அரசு அளித்த பதிலில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 142 அடி வரை நீர் தேக்க முடியும். நிபுணர் குழு அறிக்கைகள் இதைத்தான் தெரிவிக்கின்றன. 137 அடி வரைதான் இப்போது நீர் இருக்கிறது. இதனால் இந்த அணையின் நிலை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் அச்சப்பட தேவையில்லை. அணையின் பாதுகாப்பை நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்துதான் வருகிறது தமிழ்நாடு அரசு பதில் அளித்தது.
கண்டனம்
இதையடுத்து நேற்று இந்த வழக்கு விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை நிரம்பும் நிலையில் இல்லை. இதனால் இதில் இப்போது அவசரம் எதுவும் இல்லை. அணையின் நீர் மட்டும் தற்போது 137 அடியாகவே உள்ளது. இதனால் கேரளா அரசும், மனுதாரர் தரப்பும் நாளை இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று பிற்பகலுக்கு வழக்கை ஒத்திவைத்தது.
பதில்
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலையில்தான் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 126 ஆண்டுகள் பழமையானது என்பதால் அணை பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளது. அணையை உடனே கைவிட்டுவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும்.நீர்மட்ட 142 அடியாக உயர்த்தினால் பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் 5 மாவட்டங்களில் இருக்கும் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது 137 அடி இருக்கும் போது 2735 கனஅடி வரையிலான நீரை தமிழ்நாடு பயன்படுத்தலாம். ஆனால் தமிழ்நாடு 2200 கனஅடி வரை மட்டுமே பயன்படுத்துகிறது. இதனால் தமிழ்நாடு தங்கள் மாநிலத்தில் வேறு எங்காவது நீர் சேகரிப்பு வழியை ஏற்படுத்தி அங்கு இந்த நீரை கொண்டு செல்லலாம். அல்லது வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தலாம்.
ஆபத்து
முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அணையின் நீர் மட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும். 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று கிடையாது. திடீரென நீர் வரத்து அதிகமானால் ஆபத்து ஏற்படும். இது நிலநடுக்க பகுதியில் உள்ளதால் பாதுகாப்பு இல்லை. இந்த அணை கட்டப்படும் போது பல அறிவியல் விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால் இதை கண்காணிப்பு குழுவும், தமிழ்நாடு அரசும் உணரவில்லை. இதனால் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.