மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு.. சவாலான சூழலில் 5வது நாளாக மீட்பு பணி
திருவனந்தபுரம்: மூணாறில் நிலச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
மூணாறு, ராஜமலை பகுதியில் கடந்த 7ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் சுமார் 80 பேர் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை காவல் துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் இணைந்து மீட்பு பணிகளை துவங்கியுள்ளனர். நேற்றுவரை 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று காலை, மேலும் 1 உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. எனவே, பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
மூணாறில் அவ்வப்போது கடுமையான மழை பொழிவு இருப்பதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் மீட்பு பணிகள் தாமதமாகின்றன. மேலும் மாலை சூரிய வெளிச்சம் குறைந்த பிறகு மீட்பு பணிகள் நடை பெறுவது கிடையாது. சூரிய வெளிச்சம் இருக்கும்போது மட்டும்தான் நடைபெறுவதும் தாமதத்துக்கு காரணம்.
மூணாறில் இருந்து வந்த உதவிக்கரம்.. குரங்கணி மீட்புப்பணியில் களம் இறங்கிய கேரள போலீஸ்!
இந்த நிலச்சரிவு விபத்தில் சிக்கி உள்ளவர்களில் பெரும்பாலானவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது .அவர்களது உறவினர்கள் மூணாறு சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் உயிரோடு மீட்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பில் சோகத்தோடு காத்திருக்கிறார்கள்.