சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆண்கள் மட்டுமே தரிசனம்!
Recommended Video
திருவனந்தபுரம் : உலகமே உற்றுநோக்கி வந்த நிலையில் பரபரப்புகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன்கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் கடந்த மாதம் நடைதிறப்பின் போது பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றததால் போராட்டம் வெடித்தது.
பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் 2வது முறையாக இன்று நடைதிறக்கப்படுவதால் அசம்பாதிவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 2,300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 20 கமாண்டோ வீரர்கள் குழு, 100 பெண் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சபரிமலையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
1. சபரிமலை சுவாமி தரிசனம் சுமூகமாக நடக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4 பேருக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூட போலீசார் தடை போட்டுள்ளனர். 40 பெண் காவலர்கள் மற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை சன்னிதானத்திலும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.
2. உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கடந்த மாதம் கோவில் நடை திறப்பின் போது பெண்கள் சபரிமலைக்குள் செல்ல முயன்றதால் போராட்டக்களமாக மாறிப் போனது சபரிமலை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்று இந்த அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளர்களையும் நுழைய முடியாமல் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தினர்.
3. ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை இரவு 10.30 மணிவரை பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
4. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் ஏற்கனவே எரிமேலி வந்தடைந்த நிலையில் சோதனைகள் முடிந்த பின்னர் அவர்கள் தரிசனத்திற்காக சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
5. பக்தர்களுக்கு மாநில அரசு முழு பாதுகாப்பு வழங்கும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.
6. சபரிமலை கோவில் தொடர்பான செய்திகளை சேகரிக்க பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்ப வேண்டாம் என்று இந்து அமைப்புகள் கேட்டுக் கொண்டன.
7. சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போடப்பட்டுள்ள மறுசீராய்வு மற்றும் ரிட் மனுக்களை நவம்பர் 13ல் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது. எனினும் இந்த நகர்வை பொருட்படுத்தாமல் காவல்துறையினரை வைத்து தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயல்வதாக சபரிமலை கர்மா சமிதி குற்றம்சாட்டியுள்ளது.
8. ஐயப்பா தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் காவல்துறையினரைப் போல நாங்களும் முழு வீச்சில் போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
9. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தது மற்றும் சபரிமலையிலம் அதன் சுற்றுவட்டாரங்களிலும் போராட்டங்களை அரங்கேற்றியதற்காக கடந்த மாதத்தில் 2 முறை கைது செய்து ஜாமினில் வெளிவந்துள்ளார் ராகுல் ஈஸ்வர். இவர் சபரிமலை தந்திரிகளின் தாழமான் குடும்பத்தை சேர்ந்தவர்.
10. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய பெண்கள் செல்ல முயன்றதால் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 3, 700 பேர் கைது செய்யப்பட்டு 545 வழக்குகள் பதியப்பட்டன.
11. இன்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் ஆண்கள் மட்டுமே கோவிலில் ஐயப்ப தரிசனம் செய்து வருகின்றனர்.