நிபா வைரஸ்: மக்களே எச்சரிக்கையா இருங்க.. பயப்படாதீங்க.. பதற்றப்படாதீங்க.. கேரள முதல்வர் வேண்டுகோள்!
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை குறித்து பேசப்படுகிறதோ இல்லையோ நிபா வைரஸ் குறித்து தான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில்தான் பரவியது நிபா வைரஸ்.
அப்போது 13 பேரை பலி கொண்டது. 80க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் காய்ச்சலால் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பினர்.
நிபா வைரஸ் உறுதி
இந்நிலையில் இந்த ஆண்டும் கேரளாவை அச்சுறுத்த தொடங்கிவிட்டது நிபா வைரஸ். எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒவருவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இந்த மாணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
80க்கும் மேற்பட்டோருக்கு நிபா
அந்த மாணவரை தொடர்ந்து 2 செவிலியர்கள் மற்றும் 22 மாணவர்கள் என 80 க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு என மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
|
சுகாதாரத்துறை தயார்
இந்நிலையில் கேரள முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் நிபா வைரஸ் குறித்து கருத்து பதிவிட்டுள்ளது. அதில் ஒருவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள
சுகாதாரத்துறை தயாராக உள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரின் மேற்பார்வையின் கீழ், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
|
பீதியை கிளப்பக்கூடாது
உறுதிப்படுத்தும் செய்தி பீதியை கிளப்பும் வகையில் இருக்கக்கூடாது. சுகாதாரத்துறை கூறும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
|
இம்முறையும் வெற்றி பெறுவோம்
நாங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். மத்திய அரசின் குழு கொச்சி வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ்க்கு எதிராக போரிட்டு நாம் வெற்றி பெற்றோம். இப்போதும் நாம் நிபா வைரஸ்க்கு எதிராக போரிட்டு வெற்றிப்பெற போகிறோம். இவ்வாறு முதல்வர் அலுவலக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயப்பட வேண்டாம்
இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், நிபா வைரஸ் குறித்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் இதுகுறித்து பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருங்கள், நிபா வைரஸை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என கூறியுள்ளார்.