சபரிமலையில் சரண கோஷம்... ஒலி மாசு ஏற்படுவதாக கேரள வனத்துறை அறிக்கை
திருவனந்தபுரம்: சபரிமலை காடுகளில் பக்தர்கள் சரண கோஷம் எழுப்புவதால் ஒலி மாசு ஏற்படுவதாக, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வழிபட்டு வருகிறார்கள். சபரிமலை தரிசனத்திற்கு, பெருவழிப்பாதை என்ற காட்டுப்பயணம் மட்டும் தான்.
அதேபோல் ஆண்டுக்கு ஒருமுறைதான் நடைதிறப்பு என்று இருந்த வழக்கமான நடைமுறைகளை அந்த மாநில அரசு மாற்றியது. வருமானத்தை அதிகரிப்பதற்காக, மாதம்தோறும் 5 நாட்கள் நடை திறப்பு, பம்பை வரை சாலை வசதி ஏற்படுத்தியது. இதனால், கணிசமான பக்தர்கள் கூட்டம் வந்து சென்று வருகின்றனர்.
பெண்கள் தரிசனம்
ஐயப்பன் கோவிலுக்குள் இளம் பெண்களை அனுமதிப்பது இல்லை என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. சமீபத்தில், அந்த வழக்கத்தை மாற்றி, அனைத்து வயது பெண்களும் சென்று வரலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, கேரளா அரசு, கோவிலுக்குள் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்தது.
தேர்தல் தோல்வி
இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு வலுத்த நிலையில், லோக் சபா தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு காரணம் ஐயப்பன் கோவில் பிரச்சனைதான் என்று அந்த கட்சியின் உயர்நிலை கூட்டத்திலேயே பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
கேரளா வனத்துறை அறிக்கை
இந்தநிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களால் ஒலி மாசு ஏற்படுவதாக கேரளா வனத்துறை அறிக்கை அளித்து இருப்பதற்கு, அம்மாநில எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரளா மாநில வனத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், அதிகமான பக்தர்கள் வருவதால் வன விலங்குகளின் அமைதியான வாழ்க்கை பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பக்தர்களின் சரண கோஷம்
மேலும், பக்தர்களின் சரண கோஷம் சபரிமலை காடுகளில் ஒலி மாசுவை ஏற்படுத்துகிறது.
விறகு சேகரிப்பு, தற்காலிக கூடாரம் அமைக்க மரக்கிளைகள் வெட்டப்படுதல், பிளாஸ்டிக் குப்பை போன்றவையும் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பக்தர்கள் காடுகள் வழியாக நடக்கும்போது உருவாகும் பாதையால் மண் அரிப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.