ஒருதலைக்காதல்... நர்ஸ் காதை அறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்- திருவனந்தபுரத்தில் திகில்
காதலை ஏற்க மறுத்த பெண்ணின் காதை கத்தியால் அறுத்த சைக்கோ இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவனந்தபுரம்: காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் வீசுகின்றனர், கத்தியால் குத்தி கொல்கின்றனர். திருவனந்தபுரத்தில் நர்ஸ் ஒருவர் காதலை ஏற்க மறுத்த காரணத்தினால் காதை பறிகொடுத்துள்ளார். பெண்ணின் காதை அறுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பட்டப்பகலில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். திருவள்ளா, பத்தனம் திட்டாவில் பகல் நேரத்தில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் மீண்டும் ஒரு பெண்ணின் மீது கொலை முயற்சி நடந்துள்ளது.
அந்த பெண்ணை கத்தியால் குத்தியது ஏன் என்று விசாரணை நடத்திய போலீசார் 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் புஷ்பா, 39 வயதான புஷ்பா பத்தனம் திட்டாவை சேர்ந்தவர். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார். புஷ்பாவை 35 வயதாகும் நிதின் என்ற இளைஞர் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். முதலில் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்றாலும் அவனின் தொந்தரவு தொடர்ந்துள்ளது.
நேற்றும் வழக்கம் போல தான் தாங்கியிருந்த விடுதியில் இருந்து காலை 7 மணியளவில் மருத்துவமனைக்கு நடந்து சென்றார். காலை நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்ற போது, மறைந்திருந்த நிதின், பின்தொடர்ந்து வந்து கத்தியால் புஷ்பாவின் முகத்தில் வெட்டியிருக்கிறான். இதில் புஷ்பாவின் காது துண்டானது.
புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்கவே, அந்தப்பக்கம் வந்த காவல்துறை ரோந்து வாகனத்தை நிறுத்தி புஷ்பாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கழுத்திலும் முகத்திலும் பலத்த காயமடைந்த புஷ்பா மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்லத்தில் விக்டோரியா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்யும் நிதின், தன்னை விட வயது அதிகம் கொண்ட புஷ்பாவை தொந்தரவு செய்தது ஏன், ஒருதலைக்காதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.