இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் கேரளா நர்ஸ் பலி.. கணவருடன் வீடியோ காலில் பேசும் போது சோகம்!
திருவனந்தபுரம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளத்தை சேர்ந்த 31 வயது பெண் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் மோதல் வெடித்தது.
இதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது.
2014-க்கு பிறகு பெரும் மோதல்.. சீறிப் பாய்ந்த ராக்கெட் குண்டுகள்.. காஸாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி
30 பேர் பலி
இதில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முழுவதும் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.
பொதுமக்கள்
காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கட்டடம் மீது தாக்குதல்
இந்த நிலையில் காசா டவர் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அலிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன.
கேரளா பெண் பலி
இதில் பேருந்து, வாகனங்கள், கட்டடங்கள் தீயில் கருகின. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்தனர். அதில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்த 31 வயது சவுமியா. செவிலியரான இவர் இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் பணியாற்றி வந்தார்.
ராக்கெட்
இவர் நேற்று இரவு அஷ்கிலான் நகரில் தனது வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவிய ராக்கெட், சவுமியாவின் வீட்டின் மீது விழுந்ததில் சவுமியாவின் அலறல் சத்தம் கேட்டது. இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. பின்னர் அதே அஷ்கிலான் நகரில் உள்ள சவுமியாமின் உறவினர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது சவுமியா உயிரிழந்து கிடந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர்
10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த சவுமியாவுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவிற்கு வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு இஸ்ரேல் சென்ற சௌமியா வரும் ஜூலை மாதம் மீண்டும் சொந்த ஊரான கேரளா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.