சபரிமலையில் திடீர் பரபரப்பு... ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது... பக்தர்கள் அச்சம்
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆலமரம் திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், பக்தர்கள் பீதியடைந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் சென்று பெண்கள் தரிசனம் செய்தனர். அது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. மேலும், 10 க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சபரிமலை பகுதியில் ஒரு பதற்ற நிலையிலேயே உள்ளது. மேலும், அம் மாநில முதல்வர் பினராயி விஜயன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் அய்யப்பன் கோயிலிலுள்ள 18-ம் படிக்கு அருகிலுள்ள ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. ஹோமம் வளர்க்கும் தீயிலிருந்து ஆலமரத்துக்கு தீ பரவியதாக தெரிகிறது. அதனால், அந்தப் பகுதி புகை மூட்டமாக காட்சியளித்தது.
அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக, பக்தர்கள் வலிய நடபந்தல் பகுதியில் நிறுத்தப்பட்டனர். தீயை அணைத்தப் பிறகே, பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். எரிந்த மரம் 4 தலைமுறைகள் கண்டது எனக் கூறப்படுகிறது.