தமிழ்நாடு- கேரளா எல்லையில் நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை- ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை!
திருவனந்தபுரம்: தமிழ்நாடு- கேரளா எல்லையில் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கும் அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ்நாடு எல்லையில் கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் கேரளா அதிரடிப்படை போலீசார் திங்கள்கிழமை நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வயநாடு வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சில மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அங்கு பதுங்கி இருந்த 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் யார் என்பது தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
தப்பியோடிய மாவோயிஸ்ட்டுகள் தமிழகப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு- கேரளா எல்லையில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.