கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்
திருவனந்தபுரம்: கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீட்பு படையினர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கோழிக்கோடு விமான விபத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அரசு சார்பில் எடுக்கப்படும்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் சுகாதாரத் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 1056, 0471 2552056 ஆகிய எண்களுக்கு தகவல்கள் தெரிவிக்கலாம். மீட்பு பணிகளில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்த பட்டியலை சுகாதாரத் துறை தயார் செய்கிறது என ஷைலஜா தெரிவித்திருந்தார்.
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கேரளா உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் விமானத்தில் பயணம் செய்த சுதீர் வர்யாத்திற்கு (45) கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது என்றார்.
இந்த நிலையில் இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தார். மேலும் அந்த கருப்பு பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படும்.
கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது