சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 550 பேர் பெண்கள் விண்ணப்பம்... என்ன செய்யப்போகிறார் பினராயி!
திருவனந்தபுரம் : சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து முதல்முறையாக கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது பெண் பத்திரிக்கையாளர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் கோவிலுக்குள் செல்ல முயன்ற போது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தொடர் போராட்டம், பதற்றம், தடியடி என்று சபரிமலை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகள் போராட்டக்களமாகின. இதனையடுத்து நவம்பர் மாதத்தில் மீண்டும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அப்போதும் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்திருந்தன. முன் எச்சரிக்கையாக 144 தடை உத்தரவும் போடப்பட்டிருந்தது.
மீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
இந்த முறை பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லாததால் பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் சபரிமலை கோவில் நிர்வாகத்தினர், இந்து அமைப்புகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேலமுறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கானது நவம்பர் 13ல் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு முன்னரே தீர்ப்பை அமல்படுத்த பினராயி அரசு முயல்வதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
550 பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பம்
இதனிடையே சபரிமலை.காம் என்ற இணையதள பக்கத்தில் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 10 முதல் 50 வயதிற்குள்ளான 550 பெண்கள் ஐயப்பனை தரிசிக்க விரும்புவதாக விண்ணப்பம் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ஆன்லைனில் பெண்கள் ஐயப்ப தரிசனத்திற்காக விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினராயி உறுதி
எந்த ஒரு விஷயத்தையுமே செய்யும் போது எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதற்காக நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கலில் கழிப்பறை, குளியலறை மற்றும் தங்கும் வசதிகள் பெண் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்படும். தற்போதை போராட்டம் தற்காலிகமானது தான் என்றும் பினராயி விஜயன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
சபரிமலை வளர்ச்சியில் அக்கறை
சபரிமலையின் வளர்ச்சிக்காக அரசு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறது. சபரிமலை கோவிலின் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்வதாக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கோவிலுக்கு செல்லும் பாதைகளை சீரமைக்க என்று அரசு நிதி ஒதுக்கி வருகிறது என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.