விவசாயிகள்; பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள்.. ராகுலுக்கு பினராயி விஜயன் பதில் கடிதம்
திருவனந்தபுரம்: வயநாட்டில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றாலும், வயநாட்டில் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதிக்குட்பட்ட பனமரம் என்ற பகுதியில், தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் குமார் என்ற 53 வயதான விவசாயி, மூன்று வங்கிகளில் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வறுமை காரணமாக அவரால் அந்த கடனை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடனை திரும்ப கட்ட சொல்லி வங்கிகள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 25ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த செய்தி வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தியின் காதுகளுக்கு எட்டியது.
இதனால் மனவேதனை அடைந்த அவர், கேரள மாநில முதல்வரான பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் விவசாயி தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தை கேள்விப்பட்டு, தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார். கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயி தினேஷின் குடும்பத்தினருக்கு, தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும் என கோரியிருந்தார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பினராயி விஜயனை வலியுறுத்தினார்.
10ம் கிளாஸ் படிச்சவங்களும் இருக்காங்க.. கோடீஸ்வரர்களும் இருக்காங்க... குற்றபின்னணியும் நிறைய இருக்கு
வங்கி கடனை வசூலிக்கும் முகவர்களால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். கேரள விவசாயிகள் கவுரவத்துடன் வாழ மாநில அரசு கண்டறியும் வழிமுறைகளுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள பினராயி விஜயன், வயநாட்டில் விவசாயி தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார் .
மேலும் விவசாயிகளின் கடன்கள் வசூலிப்பதை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என ராகுலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.