மோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன!
Recommended Video
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி குருவாயூர் கோவிலில் துலாபாரம் கொடுத்த தாமரை மலர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக கடந்த மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றார். இதன்மூலம் காங்கிரஸ் அல்லாத ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவயேற்பது இதுவே முதல்முறை என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் மோடி.
இந்நிலையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று வெளிநாட்டு பயணம் என மாலத்தீவு செல்ல இருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு முன்னதாக கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இன்று மோடி வழிபாடு நடத்தினார்.
ஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி
எடைக்கு எடை தாமரை
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் துலாபாரம் காணிக்கை வழங்குவதுதான் சிறப்பு. இந்நிலையில் மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் முதல்முறையாக கேரளா வந்த பிரதமர் மோடி குருவாயூர் கோவிலில் துலாபாரத்தில் அமர்ந்து எடைக்கு எடை தாமரை மலர்கள் வழங்கி தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
தாமரை உற்பத்திக்கு பெயர் போனது
பிரதமர் மோடி காணிக்கையாக கொடுத்த தாமரை மலர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தாமரை மலர்கள் உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும்.
100 கிலோ தாமரை பூ
பிரதமர் மோடியின் துலாபார வேண்டுதலுக்காக கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினரும் கேரள பாஜகவினரும் சேர்ந்து தாமரை மலர்களை மூட்டை மூட்டையாக குருவாயூர் கோவிலுக்கு வரவழைத்துள்ளனர். ஒரு தாமரைப் பூவின் விலை 8 ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு கிலோ தாமரைமலர் 200 ரூபாய் என 100 கிலோ தாமரை மலர்கள் வாங்கப்பட்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
மேல்சட்டை அணியவில்லை
முன்னதாக கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி கோவிலின் ஐதீகப்படி மேல் சட்டை அணியாமல் வெள்ளை நிற சால்வையையும் கேரள பாரம்பரிய வேட்டியையும் அணிந்திருந்தார். ஆனால் மோடியின் பாதுகாவலர்கள் அவர்களின் மிடுக்கான சீருடையிலேயே இருந்தனர்.
|
கேரள பாரம்பரிய உடை
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 20 நிமிடம் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, பின்னர் கோவிலுக்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு நடந்து சென்றார். கேரள பாரம்பரிய உடையில் இருந்த மோடிக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.