கேரள கிறிஸ்தவர்களிடையே பிளவு... பிரதமர் மோடி தலையிடுவதாக மிசோரம் ஆளுநர் ஶ்ரீதரன்பிள்ளை தகவல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்தோடக்ஸ் மற்றும் ஜாக்கோபைட் கிறிஸ்தவ பிரிவினரிடையே நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கேரளாவை சேர்ந்த மிசோரம் ஆளுநர் ஶ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மலங்கரா சிரியன் சர்ச்சானது ஆர்த்தோடக்ஸ், ஜாக்கோபைட் என இரு பிரிவுகளாக நிற்கின்றன. இந்த மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
2017-ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றமானது, ஜாக்கோபைட் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களை ஆர்த்தோடக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கு எதிராக ஜாக்கோபைட் பிரிவினர் போராட்டம் நடத்தினர். இது கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது.
இந்த பிரிவினரிடையே சமாதானம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் இந்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் கேரளாவில் இந்த இருபிரிவினரிடையேயான மோதல் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேரளாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது: பினராயி விஜயன்
இந்நிலையில்தான் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மிசோரம் ஆளுநர் பிஎஸ் ஶ்ரீதரன் பிள்ளை, கேரளா கிறிஸ்தவர்களிடையேயான இந்த பிரச்சனை குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவித்திருக்கிறோம். இதனை தொடர்ந்து இருதரப்பினரும் முதலில் ஆலோசனை நடத்துவர். இதன் பின்னர் இருபிரிவினருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.