தமிழகத்தை மிஞ்சிய கேரளா... 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குபதிவு சதவீதம் அதிகரிப்பு
Recommended Video
திருவனந்தபுரம்: தமிழகத்தை காட்டிலும், கேரளாவில் அதிகபட்சமாக 77.68 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் இத்தனை சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும், கடந்த 18 ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், மக்களவைத் தொகுதிகளுக்கு 71.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.
அதேபோல, சட்டமன்றத் தொகுதிகளில் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகியது. அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக, தென் சென்னையில் 56.41 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தமாக, 2014 நாடாளுமன்ற தேர்தலை விட 2019 நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 2 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
தீவிரவாத தாக்குதல்.. 2 முறை எச்சரிக்கை விடுத்தது இந்தியா.. அலட்சியம் காட்டியது இலங்கை
இயந்திரங்கள் பழுதானது
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குபதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நீடித்தது. வாக்குபதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் பல பூத்களில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால், இரவு 10 மணி வரை வாக்குபதிவு நீட்டிக்கப்பட்டது. 2014ல் நடந்த தேர்தலில் 74.02 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது கடந்த தேர்தலை விட 3.46 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது.
வாக்குபதிவு அதிகம்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு உள்பட 8 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. கண்ணூர் தொகுதியில் அதிகபட்சமாக 83.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாடு தொகுதியில் கடந்த 2014ல் நடந்த தேர்தலில் 74.63 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 80.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குபதிவு குறைவு
திருவனந்தபுரம் தொகுதியில் தான் குறைவாக 73.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 68.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த முறை கேரளாவின் அனைத்து தொகுதிகளையும் விட இந்த தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தாலும் முந்தைய தேர்தலைவிட 4 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
13 பேர் பலி
கேரளாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் அமைதியாக வாக்குபதிவு நடந்தது. வாக்காளர்கள் காலை முதல் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களிக்க வரிசையில் நின்ற போது சுருண்டு விழுந்து 13 பேர் பலியாகி உள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் இரவோடு இரவாக அனைத்து வாக்குபதிவு இயந்திரங்களும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.