மருத்துவர்களுக்கு நேர்ந்த அவலம்... காருக்குள் தலையை நுழைத்து இருமிய கொரோனா நோயாளிகள்...!!
திருவனந்தபுரம்: கேரளாவில் பூந்துரா கிராமத்தில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதை கேள்விபட்டவுடன் அங்கு மாநில அரசின் உத்தரவின் பேரில் சென்ற மருத்துவக் குழுவினரின் முகத்தில் கிராம மக்கள் இருமி கொரோனாவை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கும் தகவலில், '' ''பூந்துரா கிராமத்தில் பெரிய அளவில் கொரோனா தொற்று பரவி வருவதை அறிந்தோம். இதையடுத்து, ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதற்கு மருத்துவக்குழு ஒன்றை அனுப்பி வைத்தோம். காரில் சென்ற மருத்துவக்குழுவினரை கட்டாயமாக காரின் கண்ணாடிகளை திறக்குமாறு, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு
காருக்குள் இருமிய கிராம மக்கள்:
இதையடுத்து கார் கண்ணாடிகளை திறந்தபோது, கிராம மக்கள் தங்களது தலையை உள்ளே நுழைத்து, இருமியுள்ளனர். இது மிகவும் மோசமான சம்பவம் என்பதுடன் ஏற்கக் கூடியது இல்லை. இதையடுத்து அங்கு சென்ற மருத்துவக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
மூன்று அடுக்கு:
கேரளாவில் கொரோனா பரவலைத் தடுக்க மூன்று அடுக்கு பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் சகஜமாக வெளியே சுற்றித் திரிய முடியவில்லை. இந்த சூழலில், வெள்ளிக் கிழமை பூந்துராவில் கூடிய மக்கள், பொது முடக்கத்தை கண்டித்ததுடன், மருத்துவக் குழுவினரிடமும் கண்டிக்கத்தக்க, அடாவடித்தனமான செயலை செய்துள்ளனர்.
சிகிச்சை மறுப்பு:
குறைந்தபட்ச அத்தியாவசிப் பொருட்கள் வாங்குவதற்குக் கூட வெளியே அனுமதிக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை அளிப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால், இவர்கள் மாஸ்க் அணிந்து செல்லாததால், மருத்துவர்கள் மறுத்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கிராம மக்களின் செயலை மாநில முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் சைலஜா இருவரும் கண்டித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
மாநிலத்தின் தலைநகரமாக இருக்கும் திருவனந்தபுரத்தில் அதிகளவில் கொரோனா தொற்று சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்று கேரள கூட்டுறவு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருந்தார். தமிழக, கேரள எல்லையில் திருவனந்தபுரம் அமைந்து இருப்பதால், இருமாநில மக்களும் எல்லைகளுக்கு சென்று வருவதன் மூலமும் தொற்று பரவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
பூந்துரா:
திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 122 பேருக்கு உள்ளூர் தொடர்பு மூலம் ஏற்பட்டுள்ளது. 17 பேருக்கு யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. பெரும்பாலும் பூந்துரா கிராமத்தில் தொற்று பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில், மருத்துவக்குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.