வெள்ளை நிறத்திலொரு கர்ப்பிணி பூனை.. உயிருடன் கட்டி தொங்க விட்ட கொடூரர்கள்.. ஆடிப் போன கேரளா!
கர்ப்பிணி பூனையை தூக்கில் தொங்க விட்ட கொடூரம் நடந்துள்ளது
திருவனந்தபுரம்: கர்ப்பமாக இருந்த வெள்ளை நிற பூனையை உயிருடன் கயிற்றில் தொங்கவிட்டுள்ளனர் கொடூரர்கள்.. இந்த சம்பவம் கேரளா மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
திருவனந்தபுரம் பால்குளங்கர பகுதியில் கிளப் ஒன்று இயங்கி வருகிறது. இதை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்தி வருகிறார். ஏராளமானோர் இந்த கிளப்புக்கு வந்து தண்ணி அடிக்கவும் சீட் விளையாடவும் தினமும் வந்து செல்வார்கள்.
இந்நிலையில், அந்தக் கிளப்பில் ஒரு பூனையை தூக்கில் உயிருடன் தொங்க விட்டுள்ளனர். அது ஒரு வெள்ளை நிற கர்ப்பிணி பூனை.. அங்கிருந்த ஒரு இரும்பு தூணில் கயிற்றை கட்டி, அதில் பூனையை தூக்கில் ஏற்றி உள்ளனர். எப்போது இதை செய்தார்கள் என்றுகூட தெரியாது. இறந்து போன பூனையின் உடல் துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தினர் பார்த்துதான், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் சொல்லி உள்ளனர்.
விசாரணை
இதையடுத்து, அங்கு வந்த இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் பார்வதி மோகன் மற்றும் விலங்குகளுக்கான மக்கள் அமைப்பின் செயலாளர் லதா ஆகியோர் வஞ்சியூர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் தூக்கில் தொங்கிய பூனை மீட்கப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது.
போஸ்ட் மார்ட்டம்
இது சம்பந்தமான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், பூனை மரணத்துக்கு விடை கிடைக்கும். ஆனால் போதையில் இருந்தவர்கள் இப்படி பூனையை தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் இது ஒரு கொடூர குற்றம்.. விலங்குகளை துன்புறுத்தினாலும் சரி, கொலை செய்தாலும் சரி.. 5 வருஷ ஜெயில் வரை தண்டனை உள்ளது. இதையடுத்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டோக்கள்
இது சம்பந்தமாக புகார் அளித்தவரில் ஒருவரான பார்வதி சொல்லும்போது, "முதலில் புகார் தந்தபோது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, ஆனால் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டதும்தான், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் போய் பார்த்தபோது, பூனையை கொன்ற இடம் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது.
கைது
மனசாட்சியே இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்தவர்கள், தங்களின் சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றார். கர்ப்பிணி பூனை கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.