குருவாயூர் வருகிறார் மோடி... வயநாடு வருகிறார் ராகுல்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி, சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்.
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.
இதனையடுத்து, 2 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி, வரும் 8 ம் தேதி கேரளா வர திட்டமிட்டுள்ளார். அன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொச்சி வரும் அவர், அங்கிருந்து குருவாயூர் கோயிலுக்கு செல்கிறார்.
குருவாயூர் கோயிலில் தரிசனம்
நண்பகல் 12 மணியளவில் குருவாயூர் கோயிலில் சாமி கும்பிடுகிறார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் வருகிறார். பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மோடி குருவாயூர் தரிசனத்திற்கு வருவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாரபூர்வமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து குருவாயூர் தேவஸம்போர்டுக்கு பிரதமர் வருகை குறித்த தகவல் கிடைத்தது.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பு இல்லை
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே, பிரதமர் மோடி வருகிறார் என்றும், கட்சி நிர்வாகிகளை சந்திக்கவோ, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ மாட்டார் என்று பாஜக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வயநாடு வருகிறார் ராகுல்
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வரும் 7, 8 தேதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மக்களவைத் தேர்தலில் 52 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட காங்கிரசால் பெற முடியாமல் போனது. ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் அமேதி கைவிட்டது.
ராகுல் அமோக வெற்றி
வயநாட்டில் அமோக வெற்றியை பெற்றார். தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கூட்டணி சார்பில், போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்தநிலையில், தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.