உபி மக்களால் நிராகரிக்கப்பட்டு.. கேரளாவில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்த தலைவர் ராகுல்.. பாஜக தாக்கு
திருவனந்தபுரம்: அமேதி மக்களால் நிராகரிக்கப்பட்டு, தற்போது கேரளாவில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்த தலைவர் தான் ராகுல் காந்தி என்று மத்திய நிலக்கரி துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி, அமேதி, வயநாடு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். நேரு குடும்பத்தினரின் பரம்பரை தொகுதியான அமேதி தொகுதியுடன் சேர்த்து மற்றொரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், ராகுல் காந்தியால் வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிரிதி ராணியிடம் தோல்வியடைந்தார்.
புலம்பெயர்ந்த தலைவர் ராகுல்
இந்நிலையில், பாஜகவின் கேரளா மாநில பொறுப்பாளரும் மத்திய நிலக்கரி துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி, ராகுல் காந்தியை புலம்பெயர்ந்த தலைவர் என விமர்சித்துள்ளார். மேலும், "அமேதி தொகுதியிலிருந்து ராகுல் காந்தி மூன்று முறை எம்பியாகி உள்ளார். ஆனால், அமேதியை ராகுல் காந்தி முன்னேற்றவில்லை. அவருடைய தொகுதிக்கு உட்பட்ட சுகாதார மையத்தில் ஒரு எக்ஸ்-ரே கருவி கூட இல்லை. அமேதி தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, தற்போது கேரள மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
எதிர் - எதிர் நிலைப்பாடு
தொடர்ந்து சபரிமலை குறித்துப் பேசிய அவர், "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது அதை வரவேற்றவர் ராகுல் காந்தி. ஆனால், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியோ அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதன் பின் சபரிமலை விவகாரம் குறித்து ராகுல் காந்தி ஒருவார்த்தை கூட பேசவில்லை.
இந்துகளை மதிப்பதில்லை
சபரி மலை விவகாரத்தில் ராகுல் காந்தி தன்னுடைய நிலையை விளக்க வேண்டும். இதை அவருக்கு நான் சவாலாகவே விடுக்கிறேன். இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் காங்கிரஸ் கட்சி துளியும் மதிப்பதில்லை. காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் கூட ஆதரிக்கின்றனர்'' என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் புரிந்துகொள்வார்கள்
மேலும், காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதன் மூலம் எதையும் பெறப்போவதில்லை என்பதைக் கேரள மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார். அதேபோல தற்போதுள்ள இடதுசாரி அரசும் கேரளாவில் மக்கள் பிரச்சினைகளைச் சரி செய்ய எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.