சோனியா பிரசவத்தின்போது நான் இருந்தேன்.. ராகுல் டெல்லியில்தான் பிறந்தார்.. கேரள நர்ஸ் பரபர பேட்டி
திருவனந்தபுரம்: ராகுல்காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி என்று கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
ராகுல் எந்த நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த எம்.பி சுப்பிரமணியன் சுவாமி இந்த சர்ச்சையை எழுப்பியிருந்தார். இது குறித்து அவர் மத்திய அரசின் உள்துறைக்கு எழுதியிருந்த கடிதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ம் ஆண்டிலிருந்து அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராவும் இருந்து வருகிறார்.
கடந்த 2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31-ம் தேதி ஆண்டு வருமான வரிக்கான ரிட்டர்ன் தாக்கல் செய்தபோது, தன்னுடைய பிறந்தநாள் 1970, ஜூன் 19 என்று குறிப்பிட்டிருந்தார். தன்னை இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார். என சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றுகொண்டதோடு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுலுக்கு நோட்டீசும் அனுப்பியது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல்களை அறிந்த கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரி, கல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜம்மா வவாதில் என்பவர் ராகுல் பிறந்தது இந்தியாவில்தான் என்பதற்கு நானே சாட்சி என்று கூறியுள்ளார். ஓய்வு பெற்ற செவிலியரான ராஜம்மா வவாதில் டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி முடித்து பின்னர் ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார், தற்போது அவருக்கு வயது 72.
சோனியா காந்திக்கு பிறந்த ஆண் குழந்தையை நானும் கையில் ஏந்தினேன். நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன். அப்போது ராகுல் மிகவும் அழகாக இருந்தார். ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி. அவர் இப்போது வயநாட்டில் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சோனியா காந்தியை பிரசவத்திற்காக அழைத்து சென்றபோது ராகுலின் தந்தை ராஜிவ்காந்தி, சஞ்சய் காந்தி, ஆகியோர் மருத்துவமனையில் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
நாட்டின் பிரதமராவது பகல் கனவு தான்... ராகுல் குறித்து மோடி விமர்சனம்
ஆனால் இப்போது சுப்பிரமணியன் சுவாமி ராகுலின் குடியுரிமை குறித்து புகார் எழுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தியின் குடியுரிமை அடையாளத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் குடியுரிமை குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் புகார் ஆதாரமற்றது. ராகுல் காந்தி டெல்லியில் பிறந்தார் என்பதற்கான அனைத்து சான்றுகளும் மருத்துவமனையில் இருக்கும். என்று ராஜம்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த சந்தர் பிரகாஷ் தியாகி, ஜெய் பகவான் கோயல், ஆகியோர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரை தேர்தலில் இருந்து போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.