தங்க கடத்தல் வழக்கு.. தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா ஸ்வப்னா சுரேஷ்?.. முன்ஜாமீனுக்கும் பக்கா பிளானாம்!
திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் தலைமறைவான கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் தமிழகத்தில் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர் முன்ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்திற்கு உணவுப் பொருள் என்ற பெயரில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி ஒரு பார்சல் வந்தது. அதை பிரித்த போது அந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் நாயர் என்பவரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த 30 கிலோ தங்கத்திற்கு உரிமை கொண்டாடியவர்களில் அவரும் ஒருவர் என்றும் தெரிந்தது.
தலைமை செயலகம்
இந்த ஸ்வப்னா தலைமை செயலகத்தில் ஐடி துறையில் ஆபரேஷனல் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்திலிருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தலைமறைவு
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராகுமாறு பலமுறை அழைத்தும் ஆஜராகாத ஸ்வப்னா, திடீரென தலைமறைவாகிவிட்டார். இவரை தேடும் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளன.
முன்ஜாமீன் பெற முயற்சி
ஸ்வப்னா தமிழகத்தில் தலைமறைவாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பாலராமபுரம் வழியாக தமிழகம் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இருந்து கொண்டே முன்ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கறிஞர்கள் குழு
மேலும் தமிழகத்திலிருந்து ஒரு வழக்கறிஞர் குழுவே கொச்சியில் முகாமிட்டிருப்பதாகவும் அங்கிருந்து கொண்டே ஸ்வப்னாவுக்கு முன்ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த சுங்கத் துறை அதிகாரிகள் ஸ்வப்னாவை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் ஸ்வப்னாவோ முன்ஜாமீன் வழக்கை பதிவு செய்ய கொச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை வரை அவர் முன்ஜாமீன் கோரியதாக தகவல்கள் இல்லை.