ஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை
திருவனந்தபுரம்: கேரளாவில் தேக்கடியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஸ்பூன் முதல் பெயர் பலகை வரை ரூ 3 கோடி மதிப்பிலான பொருட்களை அங்கு பணியாற்றியவர்களே கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தேக்கடி ஆகும். இங்கு சுற்றுலா தொடர்பான தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இங்கு தங்கும் விடுதிகள், கண்கவர் கலை பொருட்களின் விற்பனையகம் என உள்ளன. சுற்றுலா வருவோர் இந்த தங்கும் விடுதிகளில் தங்கி தேக்கடியை இயற்கை அழகை ரசிப்பது வழக்கம்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி
தத்ரூபம்
அந்த வகையில் இங்கு ஜங்கிள் வில்லேஜ் என ஒரு ரிசார்ட் உள்ளது. இது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாஜன் என்பவருக்கு சொந்தமானது. சாஜ் ஃபிளைட் என்ற குழுமத்திற்கு சொந்தமான இந்த ரிசார்ட் கேரளாவில் நிறைய இடங்களில் உள்ளன. வனத்தில் இருக்கும் சூழலை விளக்கும் வகையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டது.
பொருட்கள்
இங்கு மொத்தம் 54 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைகளிலும் ஏசி, வாட்டர் ஹீட்டர், பிரிட்ஜ், கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலி என அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு ஹோட்டலும் இருந்ததால் அங்கும் ஏராளமான சமையல் பாத்திரங்கள், அடுப்பு, பேக் செய்யும் பெரிய ஓவன்கள் இருந்தன.
ஜனவரியில் முடிவு
இந்த ரிசார்ட்டை சாஜன் வேறு ஒரு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டு, அந்த காலம் ஜனவரியோடு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து வேறு ஒரு குத்தகைதாரரை தேடி கொண்டிருந்த நிலையில் கொரோனா வந்துவிட்டது. இதனால் மார்ச் முதல் சுற்றுலா தலங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டன. இதனால் துப்புரவு பணியாளர்கள் முதல் மேலாளர்கள் வரை வேலையிழப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்கள்
பாதி சம்பளம் நிச்சயம் வழங்குவதாக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகம் அந்த ரிசார்ட்டை பராமரிக்க இரு பணியாளர்கள் மற்றும் மேலாளருக்கு அனுமதி அளித்தது. கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் கூறுகிறார்கள். நிர்வாகத்திடம் சம்பளம் கேட்டு சோர்வடைந்துவிட்டார்கள் தொழிலாளர்கள்.
பெரும் அதிர்ச்சி
இந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு அந்த ரிசார்ட்டை குத்தகைக்கு எடுக்க ஒரு நிறுவனம் முன் வந்தது. இதையடுத்து சாஜன், குத்தகைக் கேட்ட நிறுவனத்தினரை அழைத்து கொண்டு தேக்கடி வந்து ரிசார்ட்டை பார்வையிட்டார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
கதவுகள் ஜன்னல்கள்
ரிசார்ட்டின் பெயர் பலகை தொடங்கி கதவுகள், ஜன்னல்கள், கட்டில், மெத்தை, சமையல் பாத்திரங்கள், ஃபேன், ஏசி, பிரிட்ஜ், ஹீட்டர், ஓவன்கள் என ஒரு பொருளையும் விடவில்லை. எவர்சில்வர் ஸ்பூனைகூட காணவில்லை. அப்போதுதான் அங்கு பணியமர்த்தப்பட்ட மேலாளர், இரு பணியாளர்களையும் காணவில்லை.
3 கோடி பொருள்கள்
குமுளி போலீஸார் விசாரணையில் 3 கோடி மதிப்பிலான பொருட்களை காணவில்லை என தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மேலாளர் ஆலப்புழாவை சேர்ந்த ரிதீஷ், தேக்கடியை சேர்ந்த பிரபாகரன், கொல்லம்பட்டறையை சேர்ந்த நீதிராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 10 மாதங்களாக சம்பளம் தராததால் ஒவ்வொரு பொருளையும் விற்றதாக மூவரும் வாக்குமூலம் அளித்தனர்.
பாலாவின் நந்தா படம்
இந்த கொள்ளை சம்பவத்தை பார்க்கும் போது பாலாவின் நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் வரும் கருணாஸ், நீதிபதியின் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு பொருள்களை டெம்போவில் ஏற்றும்போது பக்கத்து வீட்டு மாமியிடம் சிக்குவது போல் சிக்கி மாமியை சென்டிமென்ட்டலாக டச் செய்து விட்டு அவரிடமே காபி வாங்கி குடித்துவிட்டு செல்லும் காட்சியைத்தான் இந்த சம்பவம் நினைவுக்கூர்கிறது.