சபரிமலை விமான நிலையம்.. திட்ட அறிக்கையில் ஏகப்பட்ட பிழைகள்.. வெளுத்து வாங்கிய டிஜிசிஏ
திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்திலிருந்து 88 கிலோமீட்டர் தூரத்தில் சபரிமலை விமான நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இடமானது, திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எனவே, இது புல்வெளி விமான நிலைய கொள்கைக்கு எதிராக உள்ளது என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் எருமேலிக்கு அருகிலுள்ள செருவள்ளி எஸ்டேட்டில் புல்வெளி விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக லூயிஸ் பெர்கர் என்ற தனியார் கன்சல்டன்சி நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்நிலையில் இந்த அறிக்கையில் விமான நிலையத்தின் வடிவமைப்பு, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியான கட்டுமானம் ஆகியவற்றில் பல்வேறு பிழைகள் இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது
ஏன் அனுமதி இல்லை
இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புல்வெளி விமான நிலையத்திற்கான ஒப்புதல் என்பது புல்வெளி விமான நிலையக் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. முன்மொழியப்பட்ட தளம் முறையே கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இருந்து சுமார் 88 கிமீ மற்றும் 110 கிமீ வான்வழி தூரத்தைக் கொண்டுள்ளது. அதேசமயம், புல்வெளி விமான நிலையக் கொள்கையின் பாரா 8.1 இன் படி, தற்போதுள்ள சிவில் விமான நிலையத்திலிருந்து 150 கிமீ தூரத்திற்குள் எந்த புல்வெளி விமான நிலையமும் அனுமதிக்கப்படாது.
அங்கீரம் இல்லை
தள அனுமதியைப் பெறுவதற்காக பல்வேறு இடங்களை இணைத்து வரைபடங்கள் தயார் செய்யப்பட்டது. ஆனால், நிலம் அளப்போர் மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் பல்வேறு இடங்களில் வேறுபட்டு இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம்
லூயிஸ் பெர்கர் என்ற தனியார் கன்சல்டன்சி நிறுவனம் தான் இந்த சாத்தியக்கூறு அறிக்கையை அளித்திருந்தது. அதில் தங்கல் அறிக்கைக்கு உத்தரவாதம் எதுவும் அளிக்க முடியாது என்றும் அந்நிறுவனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தங்களது அறிக்கைக்கு தாங்களே உத்தரவாதம் அளிக்க முடியாது என்று லூயிஸ் பெர்கர் நிறுவனம் தெரிவித்துள்ள பொறுப்புத் துறப்பைச் சுட்டிக்காட்டிய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம், இந்த அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை எனக்கூறி விமர்சித்துள்ளது.
மலைப்பகுதியில் ஓடுபாதை
அதேபோல், 2,700 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பல பாதகங்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதுமான நீளம் மற்றும் அகலம் இல்லாத நிலையில், மங்களூர் மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களில் அமைக்கப்பட்டது போலச் சபரிமலை விமான நிலையத்தில் மலைப் பகுதி ஓடுபாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.