சபரிமலை வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு.. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரிய மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அந்த தீர்ப்பு வந்தது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எல்லா பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என்று 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
மோசமான போராட்டம்
இந்த நிலையில் தீர்ப்பிற்கு பின் பல முறை கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்தது. வலதுசாரி அமைப்புகள், பாஜகவினர் உட்பட பலர் மிக கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் கேரளா கடந்த 4 மாதங்களாகவே பரபரப்பாக இருந்தது.
என்ன நடந்தது
அதன்பின் இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் கடந்த ஜனவரி 2ம் தேதி நுழைந்த இரண்டு பெண்கள் அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர். மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் அன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.
சீராய்வு
இந்த நிலையில் சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக நிறைய சீராய்வு மனுக்கள் வரிசையாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 5 ரிட் பெட்டிஷன் உட்பட மொத்தம் 65 மனுக்கள் இதுவரை இந்த தீர்ப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது.
இன்று விசாரணை
இந்த நிலையில் சபரிமலை தீர்ப்பின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டி.ஒய். சந்திரசூட், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று மிகவும் பரபரப்பான வாதங்கள் வைக்கப்பட்டது.
முடிந்தது
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று மாற்றியுள்ளது. இந்த மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.