சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு.. பந்தளத்தில் குவிக்கப்பட்ட 2000 போலீசார்.. பலத்த பாதுகாப்பு!
சபரிமலை கோவில் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் அளித்த சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட உள்ளது.
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மொத்தம் 65 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது. அதன்பின் விசாரணை நடந்து முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அமர்வு
இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டி.ஒய். சந்திரசூட், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதில் தீர்ப்பு வழங்கும். கேரள அரசு சார்பாகவும் இதில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த மனுக்கள் மீதான வாதம் மிக தீவிரமாக நடந்தது.
சபரிமலை வழக்கு
இந்த சபரிமலை தீர்ப்பு கடந்த வருடம் வந்த போதே பெரிய அளவில் பரபரப்பு நிலவியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து போராடி வந்தனர். இதற்கு எதிராக பாஜக கட்சியும் பெரிய போராட்டம் நடத்தியது. சபரிமலை பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது.
பெரிய கலவரம்
இந்த நிலையில் இந்தமுறையில் அதேபோல் கலவரம், போராட்டம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பந்தளம் பகுதி முழுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 2557 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
சீசன் காலம்
இது சபரிமலை சீசன் என்பதால் இன்னும் சில நாட்களில் அங்கு பக்தர்கள் வழிபட வருவார்கள். அதனால் தினமும் அதிக எண்ணிக்கையில் போலீசார் நிற்க வைக்கப்பட வேண்டும். இந்து அமைப்புகள் போராட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு ஏற்கனவே தகவல் வந்துள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதனால் கோவிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் 2500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.