சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் சாமிகளே ஆன்லைனில் உடனே புக் பண்ணுங்க
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இன்று முதல் சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் : சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது. ஐயப்பனை தரிசிக்க முடியாதோ என்று ஏக்கத்தில் தவித்த பக்தர்கள் இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி முதல் ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாட்கள் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்குமான டிக்கெட்டுகள் முழுவதும் புக்கானது. இதனால் வேறு பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் முன்வைத்தது. இதையடுத்து தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க கேரளா அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாள்கள் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.
இந்த நிலையில் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. அதனை தொடர்ந்து கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானதுறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இன்று முதல் சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மாதம் மாலையணிந்து காலை மாலை இரண்டு வேளை குளித்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பய பக்தியோடு பக்தர்கள் மலைக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாதோ என்று பல ஆயிரம் பக்தர்கள் ஏங்கி தவித்தனர். ஏக்கத்தோடு காத்திருந்த பக்தர்களுக்கு உயர்நீதிமன்ற ரூபத்தில் உத்தரவு கொடுத்துள்ளார் ஐயப்பன். பக்தர்கள் ஐயப்பனை காண உடனடியாக புக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
சபரிமலையில் வரும் 26ஆம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்கான தங்க அங்கி ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிளம்பியுள்ளது. வழிநெடுகிலும் பக்தர்கள் தங்க அங்கிக்கு வரவேற்பு கொடுத்து வழிபட்டனர். சபரிமலையில் 26ஆம் தேதிக்கு பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.