செஞ்ச போராட்டம் எல்லாம் வேஸ்டா? கேரளாவில் பாஜகவிற்கு சபரிமலை கூட கை கொடுக்கலையே!
சபரிமலை விவகாரம் பாஜகவிற்கு கேரளாவில் பெரிய அளவில் பலன் அளிக்காமல் போனது, பாஜக கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் பாஜகவிற்கு கேரளாவில் பெரிய அளவில் பலன் அளிக்காமல் போனது, பாஜக கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
வடஇந்தியாவில் தற்போது பாஜக கட்சி கிங்காக சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஜிகர்தண்டா படத்தின் முதல்பாதியில் வரும் சேது போல மிகவும் கெத்தாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் தென்னிந்தியாவில் அதற்கு அப்படியே எதிர்பதம். ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாதியில் வரும், காமெடி சேது போல மாற்றி மாற்றி பிரச்சனையில் சிக்கி சிரிப்பு காமித்துக் கொண்டு இருக்கிறது.
கேரளா சபரிமலை
கேரளாவில் பாஜக பெரிய அளவில் கால் பதிக்க சபரிமலையை மலை போல நம்பி இருந்தது. சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விஷயத்தை பெரிய அரசியலாக்கி தினமும் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டங்களில் 10 ஆயிரம் பெண்கள் வரை கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரிய எதிர்பார்ப்பு
அதேபோல் அயோத்தி பிரச்சனை போலவே கேரளாவில் சபரிமலை பிரச்சனை உருவெடுக்கும் என்றும் கூட கூறினார்கள். அப்பகுதி ஆதிவாசி மக்கள் கூட பாஜகவுடன் சேர்ந்து போராடியதாக தகவல்கள் வந்தது. இதனால் பாஜக அங்கு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மோசமான தோல்வி
ஆனால் உண்மை அப்படியில்லை. கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. அங்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக மிக மோசமான வாக்குகளை வாங்கி தோல்வியை தழுவி இருக்கிறது. கேரளாவில் உள்ள 39 உள்ளாட்சி தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. இதில் 21 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 12 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி, 2 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மோசமான உதாரணம்
உதாரணமாக, பந்தளம் தொகுதியில் 12 ஓட்டுகள், புன்னப்புரா தொகுதியில் 10 ஓட்டுகள், பத்தனம்திட்டா தொகுதியில் 7 ஓட்டுகள் என்று மிக மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது. பந்தளம் தொகுதியில் சென்ற முறை 5 ஓட்டுகள் வாங்கிய பாஜக இந்த முறை 7 ஓட்டுகள் அதிகம் வாங்கி 12 ஓட்டுகள் பெற்றுள்ளது. அதேபோல் பாஜக பல இடங்களில் மொத்தமாக டெபாசிட் இழந்துள்ளது.
அட கடவுளே
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாஜக மோசமாக தோல்வி அடைந்த இடங்கள் எல்லாமே சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகள்தான். பாஜக அதிகம் போராட்டம் நடத்தியும் பந்தளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதிகளில் மிக மோசமான வாக்குகளை வாங்கி இருக்கிறது.
கேரளா பாஜக
இதை பார்த்து கேரளா பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தேர்தலில், பாஜக நடத்திய போராட்டங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று நினைத்தது. ஆனால் தேர்தல் முடிவில் அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை. இது அம்மாநில பாஜக தொண்டர்களுக்கு உள்ளார்ந்த சோகத்தை தந்து இருக்கிறது.
என்ன நடக்கும்
இந்த முடிவுகளை பார்த்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறார். லோக் சபா தேர்தலில் சபரிமலை பிரச்சனையை பயன்படுத்தலாம் என்றுதான் பாஜக நினைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் அதுவே பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்ற போது வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கி இருக்கிறது.