சபரிமலைக்கு வரும் பெண்களை தடுக்க ஜல்லிக்கட்டு பாணியை கையில் எடுங்க.. மோடிக்கு கேரள எம்.பி கடிதம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பத்தினம்திட்டா லோக்சபா தொகுதி எம்.பி அன்டோ அந்தோணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவரது தொகுதியில்தான் சபரிமலை உள்ளது என்பதால், இக்கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ஐயப்ப பக்தர்களின் முக்கிய பகுதியான எரிமேலியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கேரளா காங்கிரஸ் (எம்) இணைந்து இன்று நடத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான, ஆர்ப்பாட்டத்தில், அன்டோ அந்தோணி பங்கேற்றார்.
இம்முறை வித்தியாசம்
அப்போது அவர் கூறுகையில், "நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில், மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. இம்முறை சரண கோஷத்திற்கு பதில் இங்கு மோதல்கள் நடப்பது எங்களுக்கு கவலை தருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினருமே எதிர்க்கிறார்கள்" என்றார்.
தெருவெங்கும் போராட்டம்
மேலும் அவர் கூறுகையில், கேரளா வரும் பக்தர்களுக்கு உரிய சேவைகளை செய்ய வேண்டிய காலகட்டம் இது. ஆனால், இங்கு ஒவ்வொரு தெருக்களிலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், சபரிமலை பாரம்பரியத்தை காக்க வீதிக்கு இறங்கி போராடிக்கொண்டுள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டால் தடுக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடைபெற செய்தது. இதன்பிறகு நாடாளுமன்றமே, சட்டத்தை நிறைவேற்றியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவசர சட்டத்தின் வழிமுறை
அவசர சட்டம் கொண்டு வந்த பிறகு அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவசர சட்டம் கொண்டுவந்தால் இந்த பிரச்சினை முடிந்துவிடும் என்பதால், இதற்கு மத்திய அரசு சம்மதிக்குமா, அல்லது போராட்டங்களை அதிகரித்து அதன் மூலம், அரசியல் ஆதாயம் பெற பாஜக முயலுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.