சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் உடலில் சாயம் பூசி ஊர்வலமாக செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் முடிந்து தற்போது மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் வருகிற 14ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பிரச்சினையால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் உடலில் சாயம் பூசி ஊர்வலமாக செல்வார்கள்.
ஒரு கையில் மரத்தழைகளையும், இன்னொரு கையில் அம்பு ஒன்றையும் ஏந்திக்கொண்டு 'சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம்' என்று குரல் எழுப்பியவாறே குதித்து ஆடிப்பாடிக்கொண்டே செல்வார்கள். இதன்மூலம் தான் என்ற அகம்பாவம் அகல்கிறது. உயர்வு தாழ்வு பேதம் நீங்குகிறது என்பது நம்பிக்கை.
சபரிமலைக்கு மாலை போடும் சாமிகள் பேட்டை துள்ளி ஆடுவது ஒரு சடங்காகும். மஹிஷியை வதம் செய்து வெற்றிகொண்டதன் நினைவாக பேட்டைதுள்ளல் ஆட்டம் ஆடப்படுகின்றது. வழக்கமாக முதலில் அம்பலப்புழை குழுவினர் முதலில் பேட்டை துள்ளல் நடத்துகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் இக்குழுவில் இருப்பர்.
பிற்பகல் நேரம் பேட்டை சந்திப்பில் உள்ள கொச்சம்பலம் பகுதியில் நின்று வானத்தில் வட்டமிடும் பருந்தை தரிசித்தபின் பேட்டை துள்ளல் என்னும் ஆட்டமும் பாட்டும் ஆரம்பமாகும். ஐயப்பனின் நெருங்கிய நண்பராக இருந்த வாவர் சுவாமிகளுக்குரிய மரியாதையாகவும் பேட்டை துள்ளலைக் கருதுவர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை முதல் முன்பதிவு தொடக்கம்
பேட்டை துள்ளி ஆடிச்செல்லும் குழுவினர் நயினார் பள்ளி வழியாக சாலையைக் கடந்து மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப்பாடிச் செல்வர். அவர்களை எருமேலி மஹல்லு ஜமாஅத் கமிட்டித் தலைவர்கள் முறைப்படி வரவேற்று அவர்களுடன் செல்வர். அவர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலை சென்றடைந்ததும் தேவசம் போர்டு அதிகாரிகள் அம்பலப்புழை குழுவினரையும் ஜமாஅத் தலைவர்களையும் வரவேற்பர்.
மதியத்திற்குப் பின் பகல் வெளிச்சத்தில் ஆகாயத்தில் நட்சத்திரத்தை தரிசித்தபின், ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் ஆரம்பமாகும். பேட்டைத் துள்ளலுக்குப் பின் இரண்டு குழுவினரும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் இரவுநேரம் தங்கிவிட்டு, அடுத்தநாள் பம்பைக்குப் புறப்படுவர். அங்கு அவர்களுக்கு விருந்துச் சாப்பாடு வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் மகரவிளக்கு விழா காண சன்னிதானத்தைச் சென்றடைவர்.
எருமேலியில் உள்ள தர்மசாஸ்தா வேட்டைக்காரனாக அமர்ந்திருக்கிறார். மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பும் வேட்டைக்காரனின் மனநிலையை பேட்டைத் துள்ளல் வெளிப்படுத்துகிறது எனலாம். இந்த ஆண்டு பேட்டை துள்ளல் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி உள்ளது.