கேரளாவில் பாஜக, மா.கம்யூ தலைவர்கள் வீடுகளில் வெடிகுண்டு வீச்சு.. தொடரும் பதற்றம்
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் 3 பெண்கள் சென்று தரிசனம் செய்த நிலையில், தலச்சேரி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வீடுகளில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் போராட்டங்கள் நடைபெற்றதால் பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர். ஆனால் பிந்து, கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் சமீபத்தில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர்.
அதனை கண்டித்த பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது. இதனை தொடர்ந்து கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், டயர்களை தீ வைத்து எரித்தும் உள்ளனர் என தகவல் வெளியானது.
இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஷம்சீர் வீடு மீது நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. அதன்பின்னர் சில மணிநேரங்கள் கழித்து நடந்த பதில் தாக்குதலில், கண்ணூர் நகரில் உள்ள பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் வீடு மீது வெடி குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனால் அந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.
அதேபோன்று தலச்சேரி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி. சசி வீடு மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்றனர். இந்த சம்பவங்களில், ஷம்சீர் வீடு மீது நாட்டு வெடிகுண்டை வீசிய விவகாரத்தில் போலீசார் பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.